ஜிஎஸ்டி.. தள்ளுபடியில் பொருட்கள் வாங்குகிறீர்களா? அடிக்கும் ஜாக்பாட்.. மத்திய அரசின் புதிய விதிமுறை
டெல்லி: பொருட்களை தள்ளுபடி விலைக்கு விற்பனை செய்யும் போது, இனி அந்த தள்ளுபடி விலைக்கே ஜிஎஸ்டி கட்டலாம் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) தெரிவித்துள்ளது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC), நிறுவனங்கள் தங்கள் விற்பனையாளர்களுக்கு வழங்கும் தள்ளுபடிகள் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் முக்கிய விளக்கங்களை வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் கடைசி கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தள்ளுபடி விலையில் விற்பனை ஆகும் பொருட்கள்
சப்ளையர்களின் இருப்பு நிலையில் உள்ள பொருட்களை விற்க ஊக்குவிக்கும் வகையில், டீலர்களுக்கு பெரும்பாலும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு புதிய மொபைல் போன் மாடல் அறிமுகமாகும்போது, ஏற்கனவே டீலரிடம் உள்ள பழைய மாடலின் விற்பனை பாதிக்கப்படலாம். இதுபோன்ற சமயங்களில், ரூ.20,000 மதிப்புள்ள ஒரு சாதனத்திற்கு நிறுவனங்கள் 10% தள்ளுபடி வழங்கலாம்.
இதனால், சில்லறை விற்பனையாளர் அந்த சாதனத்தை ரூ.18,000க்கு விற்பனை செய்வார். ஆனால், வரி அதிகாரிகள் பெரும்பாலும் ரூ.20,000க்கு ஜிஎஸ்டி செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். தற்போது, தள்ளுபடி செய்யப்பட்ட விலைக்கு மட்டுமே வரி செலுத்தப்பட வேண்டும் என்று துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், சில சமயங்களில் நிறுவனம் சில்லறை விற்பனையாளரை தள்ளுபடி விலையில் விற்குமாறு கேட்கிறது. இந்த தள்ளுபடியானது விநியோகஸ்தர் மூலம் வழங்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில், சில்லறை விற்பனையாளருடன் நேரடி ஒப்பந்தம் இல்லாததால், ரூ.20,000க்கு வரி செலுத்தப்பட வேண்டும் என்று துறை கருதுகிறது.
கேபிஎம்ஜி இந்தியாவின் மறைமுக வரிப் பிரிவின் கூட்டாளியும் தேசியத் தலைவருமான அபிஷேக் ஜெயின் இது குறித்துக் கூறுகையில், "உற்பத்தியாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், டீலர்களுக்கும் இடையிலான பல்வேறு வகையான தள்ளுபடி பரிவர்த்தனைகளின் ஜிஎஸ்டி குறித்த தெளிவை இந்த சுற்றறிக்கை வழங்குகிறது. இது வரவேற்கத்தக்கது.
இந்த விளக்கம், தொழில்துறையினருக்கும் வர்த்தகர்களுக்கும் இத்தகைய பரிவர்த்தனைகளை அதிக நம்பிக்கையுடன் மேற்கொள்ள உதவும். நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய ஒரு பிரச்சினையாக இருந்த இது தொடர்பான சச்சரவுகளைக் குறைக்கும். விநியோகச் சங்கிலியில் உள்ள டீலர்கள் மூலம் இறுதி நுகர்வோருக்கு குறிப்பிட்ட பலன்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் தொடர்பான சூழ்நிலைகளில், வணிகங்கள் தங்கள் நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம்" என்று தெரிவித்தார்.
அதே சமயம் ஜிஎஸ்டி வரி குறைப்பு ஏற்பட்டாலும் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்று FMCG நிறுவனங்கள் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. FMCG என்பது வேகமாக விற்பனை ஆக கூட அத்தியாவசிய பொருட்கள் ஆகும்.
இந்த குறைந்த மதிப்புள்ள பொருட்களின் சில்லறை விலையை குறைக்க முடியாது என்று மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் வாரியத்திடம் (CBIC) இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி (GST) குறைப்பு காரணமாக விலையை குறைத்தால், அது நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். மாறாக, பேக் அளவுகளை அதிகரிப்பதாக நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.
ரூ. 5, ரூ. 10, ரூ. 20 போன்ற குறிப்பிட்ட விலை புள்ளிகளில் விற்கப்படும் பிஸ்கட், சோப்பு, பற்பசை தயாரிப்பாளர்கள், இந்த விலைகளை குறைப்பது இந்திய சந்தையில் சாத்தியமில்லை என்கிறார்கள். உதாரணமாக, முன்பு 18% ஜி.எஸ்.டி உடன் ரூ. 20க்கு விற்கப்பட்ட பிஸ்கட்டின் ஜி.எஸ்.டி செப்டம்பர் 22 க்குப் பிறகு 5% ஆக குறையும். இதனால் அதன் விலை ரூ. 17.80 அல்லது ரூ. 18 ஆக குறைய வேண்டும்.
நாள்தோறும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ரூ. 18 என்பது சரியான விலையாக இருக்காது. இந்திய நுகர்வோர் ரூ. 5, ரூ. 10, ரூ. 20 விலையிலான பொருட்களை வாங்கப் பழகிவிட்டனர். இந்த அமைப்பை நாங்கள் மாற்ற விரும்பவில்லை என்று இந்த நிறுவனங்கள் நினைக்கின்றன.
ஜிஎஸ்டி வரி மாற்றும் - விலையை குறைக்க முடியாது
இந்த நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், "விலையை அப்படியே வைத்துக்கொண்டு, பேக் செய்யப்பட்ட பொருளின் அளவை அதிகரிக்கலாம். உதாரணமாக, ரூ. 20 பிஸ்கட் பேக்கின் அளவு அதிகரிக்கும்," என்றார். பிகாஜி ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரிஷப் ஜெயின், ஜி.எஸ்.டி பலன்களை நுகர்வோருக்கு முழுமையாக கொண்டு சேர்க்க, பேக்குகளின் எடையை அதிகரிப்போம் என்று தெரிவித்தார்.
நிதி அமைச்சக அதிகாரிகள், FMCG நிறுவனங்கள் கூடுதல் லாபம் ஈட்டுவதைத் தடுக்க, இது போன்ற பொருட்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினர்.












Click it and Unblock the Notifications