நிஜ ஆர்ஆர்ஆர்! சுதந்திரத்துக்காக கொரில்லா யுக்தி! பிரிட்டிஷ்காரர்களை ஓடவிட்ட சீதாராம ராஜூவின் வரலாறு
டெல்லி: இந்தியாவின் சுதந்திரத்துக்காக கொரில்லா யுக்திகளை பயன்படுத்தி பிரிட்டிஷ்காரர்களையே ஓடவிட்ட அல்லூரி சீதாராம ராஜூவின் வாழ்க்கை குறிப்பினை இதில் பார்க்கலாம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 4-ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 30 அடி உயர வெண்கலச் சிலையை திறந்து வைத்தது அனைவரும் அறிந்ததே.
ஆனால் பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவிலிருந்து விரட்ட போராடிய சுதந்திர போராட்ட தியாகி அல்லூரி சீதாராம ராஜூ குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அவரது 125வது பிறந்தநாள் விழாவை ஒட்டி தான் பிரதமர் மோடி கடந்த மாதம் 4ம் தேதி அவரது சிலையை திறந்து வைத்தார்.
'சுதந்திரத்துக்காக 16 ஆண்டுகள் சிறைவாசம்'.. பலரும் அறியாத லால்மோகன் சென்னின் ஆச்சர்ய வரலாறு!
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்
சுதந்திர போராட்ட போரில் அதிகம் கொண்டாடப்படாத அல்லூரி சீதாராம ராஜூவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டே சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது. வனத்தின் நாயகன் என்று கொண்டாடப்படும் சீதாராம ராஜூவை பற்றி சுதந்திர அமுத பெருவிழாவின் கொண்டாடப்படும் தருணத்தில் நாம் விரிவாக பார்க்கலாம்.
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பண்ட்ரங்கி கிராமத்தில் 1897ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சீதராம ராஜூ பிறந்தார்.
சிறு வயதில் இருந்தே...
சுதந்திர போரட்டத்தின் போது தேசபக்தி குறித்த சொற்பொழிவுகள் சீதாராம ராஜூவுக்கு சுதந்திர வேட்கையை சிறுவயதில் இருந்தே ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது தந்தை மறைவால் பள்ளி படிப்பானது பாதியில் நின்றது. தொடர்ந்து அவர், மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு என தனது பதின்ம வயதில் பல இடங்களுக்கும் யாத்திரையும் பயணமும் மேற்கொண்டார். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நாட்டில் நிலவிய சமூக-பொருளாதார நிலைமைகள், குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளில் காணப்பட்ட நிலை அவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்களை எதிர்த்து போராட துணிந்தார்.
மக்களின் குரலாகவும், பலமாகவும் மாறினார்
பழங்குடியின பகுதிகளில் கிராமவாசிகள் ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்டனர். பழங்குடியினர்கள் போதிய விழிப்புணர்வு அற்றவர்களாகவும் அதிகாரம் இன்றியும் இருந்ததால் ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டனர். இதனை கண்டு கொதித்தெழுந்த அல்லூரி பழங்குடியின மக்களின் குரலாகவும், பலமாகவும் சீதாராம ராஜூ மாறினார். பழங்குடியின மக்களை ஒருங்கிணைத்த சீதாராம ராஜூ அவர்களுக்கு கொரில்லா போன்ற போர் யுக்திகளை கற்றுக் கொடுத்தார். துணிச்சலான புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவராக சீதாராம ராஜூ விளங்கினார்.
ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு படை
தனது புரட்சிகர பயணத்தின் போது சிட்டகஹாங்க் (தற்போது வங்காளதேசம்) நகரில் உள்ள புரட்சியாளர்களை சந்தித்தார். அப்போதுதான், அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு இயக்கத்தை கட்டமைக்க முடிவு செய்தார். அதன்படி சீதாராம ராஜூ விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆதிவாசிகளை திரட்டி ஒருங்கிணைத்து, வலுவான ஒரு படையை உருவாக்கினார். 19ம் நூற்றாண்டில் ஆந்திரா பகுதியில் பழங்குடியினருக்கு எதிராக ஆங்கிலேயே அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக 1882-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மெட்ராஸ் வனத்துறை சட்டம் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தி கடுமையாய பாதித்தது.
காவல் நிலையங்களில் தாக்குதல்
இதனை எதிர்த்து, 1922-ஆம் ஆண்டு அல்லூரி சீதாராம ராஜூ தலைமையில் ஆயுதம் ஏந்தி பலரும் போராட்டம் செய்தனர். வெறும் வில் அம்புகளை கொண்டு பிரிட்டிஷ் படைகளை எதிர்க்க முடியாது என்பதால் எதிரிகளின் ஆயுதத்தையே கைப்பற்ற சீதாராம ராஜூ திட்டமிட்டார். இதற்காக ஆகஸ்ட் 22 ஆம் 1922 ஆம் தேதி சிந்தபள்ளி காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தினார். அதன்பிறகு ரம்பச்சோதவரம், தம்மனப்பள்ளி, கிருட்டிணா தேவி பேட்டை, ராஜவோம்மங்கி, அடடீகலா, நர்சிப்பட்டிணம் மற்றும் அன்னவரம் ஆகிய இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் தாக்குதல் நடத்தினார்.
பிரிட்டிஷ்காரர்களை மிரள செய்தார்
ஆங்கிலேயர்களை முழுவதுமாக எதிர்க்க தேவைப்பட்டும் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் ஓரளவுக்கு இந்த தாக்குதலின் மூலம் கிடைத்தது. தாக்குதலுக்குப் பிறகு கொள்ளையடித்து விட்டு ஸ்டேஷன் டைரியில் கையெழுத்திட்டார். இது சீதாராம ராஜூவின் தனித்த அடையாளமாகவும் மாறியது. இதேபோல் தம்மனப்பள்ளி அருகே இரண்டு பிரிட்டிஷ் காவல் அதிகாரிகளை இவரது இயக்கம் கொன்றது. இந்த சம்பவம் பிரிட்டிஷ்காரர்களை மிரளச்செய்தது. இதனால் பிரிட்டிஷ் அரசு சீதாராம ராஜூ தலைக்கு எதிராக 10 ஆயிரம் ரூபாயை வெகுமதி அளிப்பதாக அறிவித்தது. மேலும் சீதாராம ராஜூவின் இயக்கத்தை ஒடுக்குவதற்காக ஆயிரக்கணக்கான வீரர்களையும் பிரிட்டிஷ் ஈடுபடுத்தியது.
இந்திய அரசு தபால் தலை
எனினும் கொரில்லா யுக்திகளை பயன்படுத்தி சீதாராம ராஜூ அனைத்தையும் முறியடித்தார். இதையடுத்து, ஆங்கிலேய அரசு டிஜி ரதர்போர்ட் என்ற ஆதிகாரியை 1924ம் ஆண்டு, சீதாராம ராஜூவின் இயக்கத்தை ஒடுக்க நியமித்தது. இதில் சீதாராம ராஜூக்கு நெருக்கமானவர்களை பிடித்த ரதர்போர்டு அவர் எங்கு இருக்கிறார் என்பதை கூறுமாறு அவர்களை துன்புறுத்தினார். 40 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து சீதாராம ராஜூவை ஆங்கிலேய படைகள் தீவிரமாக தேடின. பழங்குடியின மக்களுக்கு எதிரான துன்புறுத்தலைக் கண்டு வெதும்பிய அல்லுரி, ஆங்கிலேயர்களிடம் சிக்கி 1924-ம் ஆண்டு வீர மரணம் அடைந்தார். வெறும் 27 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்ந்தார். ஆனால், அவரது தியாகம் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. 1986 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு தபால் தலையை வெளியிட்டு கவுரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.