அமுல் பால் விலை அதிரடி உயர்வு.. தேர்தல் முடிந்ததும் அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் குஜராத் பாஜக அரசு
அகமதாபாத்: குஜராத்தின் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு கூறியுள்ளது. தேர்தல் முடிந்த கையோடு பால் விலை உயர்த்தப்பட்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளது. தேர்தல் முடிந்ததும் சுங்க கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்று வாகன ஓட்டிகள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) வெளியிட்ட அறிக்கையில் அரை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமுல் கோல்டு, அமுல் சக்தி, அமுல் டீ ஸ்பெஷல் மில்க் என அனைத்து அமுல் பால் வேரியண்ட்களும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட புதிய விலையின் படி அமுல் கோல்டு பால் ஒரு லிட்டர் 64 ல் இருந்து 66 ஆக உயர்ந்துள்ளது. அமுல் டீ ஸ்பெஷல் பால் விலை தற்போது 64 ஆக உயர்ந்துள்ளது. தயிர் விலையும் உயர்ந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது.
உற்பத்தி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு செலவை ஈடுகட்டும் விதமாக பால் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications