காங்கிரஸ் படுதோல்வி.. இது சாதாரண வெற்றியல்ல.. குஜராத் மாடலின் வெற்றி.. பட்டென கூறிய பிரகலாத் ஜோஷி
டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற உள்ள நிலையில், ‛இது பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள உண்மையான நம்பிக்கையை காட்டுகிறது எனவும், இது சாதாரண வெற்றி இல்லை. குஜராத் மாடலுக்கு கிடைத்த வெற்றி'' என மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங மற்றும் பிரகலாத் ஜோஷி கூறி காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டை புறம்தள்ளி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவியது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் என்பதால் இந்த தேர்தல் அதிக கவனம் பெற்றது. மேலும் பாஜக அடிக்கடி கூறும் குஜராத் மாடல் வளர்ச்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை எடை போடும் தேர்தலாக இது இருந்தது.
தூள் தூளா சிதறிய கோட்டை.. காங். மிஸ் பண்ணிருச்சே.. பாஜக மெயின் சக்ஸஸே இதான்.. பரிதாப குஜராத் கதர்கள்
இன்று ஓட்டு எண்ணிக்கை
மேலும் 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இதனால் பாஜக மீது அதிருப்தி அலை உள்ளதா? இல்லையா? என்பதை பொதுமக்கள் வெளிக்காட்டும் தேர்தலாக இது கருதப்பட்டது. அதேபோல் பாஜகவின் ஆட்சியை விரட்டி புதிதாக அரசை அமைக்க காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் களமிறங்கின. இதனால் மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில் தான் டிசம்பர் 1ல் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ல் 2வது கட்டமாக 93 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.
வெற்றி பெறும் பாஜக
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. மொத்தம் 37 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் துவக்க முதலே பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. காங்கிரஸ் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. இன்று காலை 11 மணி நிலவரப்படி குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 152 தொகுதிகளிலும் காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 7 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. இதன்மூலம் குஜராத்தில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களில் பாஜக சார்பில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
மோடி மீது நம்பிக்கை
இந்நிலையில் தான் குஜராத் தேர்தல் வெற்றி பற்றி மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‛‛குஜராத்தில் எதிர்ப்பு அலை எதுவும் இல்லை. குஜராத்தில் நாங்கள் புதிய சாதனையை படைத்துள்ளோம். அம்மாநில மக்கள் பிரதமர் மோடி மீது உண்மையான நம்பிக்கை கொண்டுள்ளனர்'' என்றார்.
குஜராத் மாடலுக்கு கிடைத்த வெற்றி
இந்நிலையில் குஜராத் மாநில தேர்தல் வெற்றி பற்றி மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேட்டிளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛குஜராத் மாடலை 2000-2001ம் ஆண்டுகள் முதல் மக்கள் ஏற்று கொண்டு வருகின்றனர். எங்களின் குஜராத் மாடலை மக்கள் ஏற்று கொண்டு வருகின்றனர். அதன் பலன்தான் பாஜகவுக்கு வரலாற்று வெற்றியை பெற்று கொடுத்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். குஜராத் மக்களுக்கும், பாஜக வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார். மேலும் பல பாஜக தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை குஜராத் மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.