நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் இவர்தான்! அறிவிப்பு வெளியானது!
டெல்லி: தற்போது தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய ஆணையராக ஞானேஷ்குமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்வது தொடர்பான மசோதாவை வரைவு செய்ததில் ஞானேஷ்குமார் முக்கிய பங்காற்றியுள்ளார்.

140 கோடி மக்களுடன் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கிறது. இந்த அந்தஸ்தை மேலும் சிறப்படைய செய்வது தேர்தல்கள்தான். எனவே இந்தியாவுக்கு தேர்தல்கள் மிக முக்கியமானவை. இந்த தேர்தல்களை, இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதன் ஆணையராக 3 பேர் இருப்பார்கள். ஆனால் மத்திய அரசு பழைய சட்டத்தை மாற்றி புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு ஆணையர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனை பிரதமர் தலைமையிலான குழுதான் தேர்வு செய்யும். குழுவில் பிரதமரும், மத்திய அமைச்சர் ஒருவரும், எதிர்க்கட்சி தலைவரும் இருப்பார்கள். அந்த வகையில் மோடி, அமித்ஷா மற்றும் ராகுல் காந்தி அடங்கிய குழு நேற்று கூடியது. தற்போது உள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் பிப்.18ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய ஆணையரை தேர்ந்தெடுக்க குழு கூடியது. யார் அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் என்பது நேற்று தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ராஜீவ் குமாருக்கு அடுத்தபடியாக மூத்தவராக இருக்கும் ஞானேஷ் குமார்தான் தலைமை தேர்தல் ஆணையராக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர் பிப்.19ம் தேதி முதல் தனது பதவியில் தொடர்வார் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 1989ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்த விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications