வண்டி வண்டியாக வருதாமே வெங்காயம்.. கிலோ ரூ.35 தான்.. சென்னைக்கு எப்போன்னு பாருங்க.. தமிழ்நாடு ஹேப்பி
டெல்லி: நாளுக்கு நாள் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசு மலிவு விலை வெங்காய விற்பனையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த அறிவிப்பானது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா முழுதும், உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. குறிப்பாக சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுப்பொருளான வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
பணவீக்கம்: குறிப்பாக நாளுக்கு நாள் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது... அதன்படி, சலுகை விலையில் பொதுமக்களுக்கு வெங்காயம் விற்பனையை கொண்டுவந்துள்ளது.

நடமாடும் வேன்கள் மற்றும் கூட்டுறவு கடைகள் வாயிலாக இந்த வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், 35 ரூபாய்க்கு, 1 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தள்ளது.
மத்திய அரசு: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் வாயிலாக, இந்த சில்லறை விற்பனையை மத்திய அரசு துவங்கியுள்ளது... டெல்லி, மும்பையில் இந்த சில்லறை விற்பனை முதல்கட்டமாக துவக்கி வைத்த மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இதுகுறித்து சொன்னதாவது:
"உணவு பொருட்கள் மீதான பணவீக்கத்தை, கட்டுக்குள் வைத்திருப்பது மத்திய அரசின் முன்னுரிமை. பணவீக்க விகிதத்தை குறைப்பதற்கும், உணவு பொருட்களின் விலையை நிலையாக வைத்திருக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போதைய சூழ்நிலையில், மத்திய அரசிடம் வெங்காய கையிருப்பானது, 4.7 லட்சம் டன்னாக இருக்கிறது.
பொருட்கள் விலை: விலை நிலைப்படுத்துதல் நிதியம் என்ற அமைப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும்போது, அதை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.. அந்தவகையில், முதல்கட்டமாக, டெல்லியிலும், மும்பையிலும், வாகனங்கள் வாயிலாக வெங்காயத்தின் சில்லறை விற்பனையானது தற்போது துவங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, கோல்கத்தா, கவுகாத்தி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ராய்ப்பூர், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில், விற்பனை துவங்கும்.
அடுத்த வாரம் முதல், இந்த நகரங்களில் விற்பனைகள் ஆரம்பமாகிவிடும்.. அங்குள்ள கூட்டுறவு மற்றும் ரேஷன் கடைகள், நடமாடும் வேன்கள் ஆகியவற்றில் வெங்காயம் வைக்கப்பட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் இந்த விற்பனை நடைபெறும். செப்டம்பர் மூன்றாவது வாரத்திற்குள், இந்தியா முழுதும் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும், சில்லறை விற்பனையாக, 35 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயம் விற்கப்படும்" என்றார்.
செம குஷி: சென்னையில், மலிவு விலை விற்பனையாக அடுத்த வாரம் முதல், 35 ரூபாய்க்கு, 1 கிலோ வெங்காயம், நடமாடும் வேன்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது இல்லத்தரசிகளுக்கு குஷியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications