எல்லாமே வீண்.. ஹரியானாவில் அரவிந்த் கெஜ்ரிவால் அப்படி பிரச்சாரம் செய்தும் .. ஆம் ஆத்மி படுதோல்வி
டெல்லி: ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் கணிசமான தொகுதிகளை குறி வைத்து ஆம் ஆத்மி கட்சி களம் கண்ட நிலையில் எந்த தொகுதியிலும் அக்கட்சி இதுவரை முன்னிலை வகிக்கவில்லை. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிணை பெற்று வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் பெரிய அளவில் ஹரியானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதிலும் அங்கு ஆம் ஆத்மி படுதோல்வியை சந்தித்துள்ளது.
பா.ஜனதா ஆளும் ஹரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா, அங்கே ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கி உள்ளது. அதேநேரம் 10 ஆண்டுகளாக அதிகாரத்தை இழந்திருந்த காங்கிரசோ, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வேகத்தில் வேலை செய்தது.

இந்த இரு கட்சிகளை தவிர ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜே.ஜே.பி-ஆசாத் சமாஜ் கூட்டணி என பலமுனை போட்டி காணப்பட்டது. எனினும் பெரும்பாலான இடங்களில் பா.ஜனதா-காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி இருந்தது வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரியவந்துள்ளது.
இந்த தேர்தலில் ஆரம்ப கட்ட நிலவரப்படி முன்னிலை வகித்த காங்கிரஸ் கட்சி, அதன்பிறகு பின்னடைவை சந்தித்துள்ளது. காலை 11 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின் படி, பாஜக 49 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் 15 லட்சத்து 25 ஆயிரத்து 373 வாக்குகளும், பாஜக 14 லட்சத்து 87 ஆயிரத்து 305 வாக்குகள் பெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக மற்றவை 4 லட்சத்து 10 ஆயிரத்து 768 வாக்குகள் பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை 58 ஆயிரத்து 374 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை..

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் கணிசமான தொகுதிகளை குறி வைத்து ஆம் ஆத்மி கட்சி களம் கண்ட போதிலும், அதுவுமே அக்கட்சிக்கு சாதகமாக அமையவில்லை.. பக்கத்து மாநிலமான பஞ்சாப்பிலும், தலைநகரான டெல்லியிலும் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மிக்கு இந்த தேர்தல் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிணை பெற்று வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் பெரிய அளவில் ஹரியானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதிலும் மக்கள் ஆம் ஆத்மியை நிராகரித்திருப்பது வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிகிறது.












Click it and Unblock the Notifications