விவசாயிகளை முடக்கும் ஷம்பு எல்லை திறப்பு-ஹைகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹரியானா அரசு
டெல்லி: மத்திய அரசுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை முடக்கும் வகையில் மூடப்பட்ட ஷம்பு எல்லையை 7 நாட்களுக்குள் திறக்க வேண்டும் என ஹரியானா மாநில அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மாநில உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது ஹரியானா மாநில அரசு.
மத்திய அரசுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் டெல்லி நோக்கி திரண்டனர். உலகை உலுக்கிய ஓராண்டு விவசாயிகளின் போராட்டத்தின் போது மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வர வேண்டும், விவசாய கடன்கள் தள்ளுபடி ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக டெல்லியில் போராடுவதற்கு பஞ்சாப் ஹரியானா விவசாயிகள் ஷம்பு எல்லை அருகே திரண்டனர்.

ஆனால் ஹரியானா மாநில அரசோ கடந்த பல மாதங்களாக ஷம்பு எல்லையை மூடி விவசாயிகளை அங்கேயே முடக்கி வைத்துள்ளது. ஷம்பு எல்லையை தாண்ட முயன்ற விவசாயிகளை கொடூரமாக தாக்கியது ஹரியானா அரசு.
ஷம்பு எல்லையை மூடிய ஹரியானா அரசுக்கு எதிராக விவசாயிகள் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த மாநில உயர்நீதிமன்றம், ஹரியானா அரசை கடுமையாக விமர்சித்தது. மேலும் ஒரு வாரத்தில் ஷம்பு எல்லையை திறந்தாக வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், உஜல் பூயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த 12-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், ஒரு மாநில அரசால் எப்படி நெடுஞ்சாலையை முடக்க முடியும்? போக்குவரத்தை ஒழுங்கு செய்வதுதான் அதன் பணி. ஆகையால் ஷம்பு எல்லையை உடனே திறக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் ஹரியானா அரசு இதனை ஏற்கவில்லை. மேலும் உயர்நீதிமன்றத்தின் ஷம்பு எல்லை திறப்பு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹரியானா மாநில அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைமையை சுட்டிக்காட்டி ஷம்பு எல்லை திறப்பு உத்தரவுக்கு தடை கோரி ஹரியானா மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications