நாடு முழுக்க எழுந்த ஆக்ரோஷம்.. ஹத்ராஸ் மாவட்ட போலீஸ் எஸ்.பி. உட்பட 5 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
டெல்லி: இளம் பெண் கொலை மற்றும் அதைச் சார்ந்த தில்லுமுல்லு குற்றச்சாட்டுகளால், உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உயர் சாதியை சேர்ந்த ஒரு கும்பலால், உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் கடந்த மாதம் 14ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டார். கடும் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்ற அவர் கடந்த செவ்வாய்க்கிழமை பலியானார். ஆனால் அவர் உடலை குடும்பத்தாரிடம் கொடுக்காமல் போலீசார் தகனம் செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுக்க போராட்டங்கள் வலுப்பெற்றன.

பல கட்சிகளும், மனித ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு உ.பி. அரசால், அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் ஆரம்பகட்ட விசாரணையின்படி, போலீஸ் தரப்பில் தவறுகள் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில்தான், போலீஸ் எஸ்பி உட்பட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் உண்மை கண்டறிதல் சோதனைக்கு உட்படுத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில்தான், காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications