வெப்ப அலை வீசும்.. கவனமாக இருங்க.. 9 மாநிலங்களுக்கு எச்சரிக்கை கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
டெல்லி: மேற்கு வங்காளம், பீகார், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்ப நிலை ஆபத்தான அளவில் இருக்கும் என்று ஆரஞ்சு அலார்ட் கொடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதேபோல், சிக்கிம், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்றும் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் கொடூரமாக உள்ளது. வழக்கமாக மே மாதத்தில் தான் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதமே வெப்பம் உச்சம் தொட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருந்தது.

தமிழ்நாட்டை பொறுத்தவரைக் ஜனவரிக்கு பிறகு வெப்பம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஈரோடு, வேலூர் பரமத்தி பகுதிகளில் தொடர்ந்து வெப்பம் 100 டிகிரிக்கு மேல் தற்போது பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையிலும் கூட இந்தாண்டில் முதல்முறையாக வெப்பம் 100ஐ தாண்டியிருந்தது.
வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் மாநிலத்தில் 14 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது. தமிழகத்தில் இப்படி என்றால் வட மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கிறது.
மேற்கு வங்காளம், பீகார், ஆந்திர பிரதேசம் வெப்ப நிலை ஆபத்தான அளவில் இருக்கும் என்று அதாவது ஆரஞ்சு அலார்ட் கொடுத்துள்ளது. அதேபோல், சிக்கிம், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனினும், ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வழக்கமாக கனமழை நேரத்தில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கும் விதமாக ரெட், ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்படும். அதீத வெயிலின் போது இந்த ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்படுவது எதற்காக என்றால், அதிக வெப்ப நிலையை குறிக்கும் விதமாக விடுக்கப்படுகிறது. அதீத வெப்பத்தால் வெப்பம் தொடர்பான உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்பதை எச்சரிக்கும் விதமாக கொடுக்கப்படுவது ஆகும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று முன் தினம் 13 பேர் வெப்பத்தாக்கு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதீத வெப்பம் நிலவினால் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் நீண்ட காலமாக நோயுடன் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் கூட போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பன உள்பட வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சில பரிந்துரைகளையும் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications