மதியம் 1 - 4 மணி வரை அனைவருக்கும் கட்டாய ஓய்வு.. டெல்லியில் கடும் வெயில் காரணமாக முதல்வர் அதிரடி ஆணை
டெல்லி: டெல்லியில் நிலவும் கடும் வெப்ப அலையை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.
சுட்டெரிக்கும் மதிய வெயிலில் பணியாற்றுபவர்களே வெப்ப தாக்கத்திற்கு அதிகம் உள்ளாவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கிட்டத்தட்ட 40 நாட்களாகத் தொடர்ச்சியாக 40° செல்சியஸுக்கு அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தலைநகர் டெல்லியில் கோடை காலத்தில் அதிக வெப்பம் நிலவுகிறது. இந்த ஆண்டு, கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, அதிக அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறிய செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி அரசு நகரில் ஒரு விரிவான மதிப்பீட்டை நடத்தியது.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தலைமைச் செயலகத்தில், 2026 ஆம் ஆண்டின் வெப்ப அலை செயல் திட்டத்தின் கீழ் தயார் நிலையை மதிப்பிடுவதற்காக ஒரு உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி வெப்பத்தை மக்கள் எதிர்கொள்ள பல்வேறு ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதில் ஒரு திட்டம் தான் 'சில் பிளான்' (chill plan). அதன்படி பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் 'வாட்டர் பெல்' முறை, பேருந்து நிறுத்தங்களில் தண்ணீரை சாரல் போல் தெளிக்கும் மிஸ்டிங் முறை முறை உள்ளிட்டவை அடங்கியதுதான் சில் பிளான்.
மாணவர்கள் பள்ளிகளில் தண்ணீர் குடிக்க மறந்து போவதால் பலவித உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதைத் தவிர்த்து அவர்கள் அதிக தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய 'வாட்டர் பெல்' எனும் முறை அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் வீடு திரும்புவதற்கு முன்பு அவர்களுக்கு ORS கரைசல் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொது இடங்களில் குறிப்பாக மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிறுத்தங்களில் வாட்டர் கூலர்ஸ் மற்றும் 11,000-க்கும் மேற்பட்ட கூலிங் பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல், குளிர்ந்த குடிநீர் கிடைப்பதை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வெப்பம் தொடர்பான பாதிப்புகளுக்குப் போதுமான படுக்கை வசதிகளை அனைத்து மருத்துவமனைகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும், வெப்ப அவசரநிலைகளைக் கையாள ஆம்புலன்ஸ்களில் அத்தியாவசிய வசதிகள் பொருத்தப்பட வேண்டும் என்றும் மேலும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நகரம் தழுவிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெப்ப அலையை சமாளிக்க அரசு, தனியார் ஊழியர்களுக்கு பகல் 1 மணி - மாலை 4 வரை கட்டாயமாக ஓய்வு அளிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அறிவுறுத்தியுள்ளார். சுட்டெரிக்கும் மதிய வெயிலில் வெளியே பணிபுரியும் ஊழியர்கள் மீதுதான் வெப்ப அலையின் முழு சுமையும் ஏறுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
டெல்லியின் சுற்றுவட்டார பகுதிகளான உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத், நொய்டா பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரத்தை மாற்றி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் பொருட்டு, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய நேரத்தின்படி, வகுப்புகள் காலை 7:30 மணிக்குத் தொடங்கி, மதியம் 12:30 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications