"115 டிகிரி.." வாட்டி வதைக்கும் வெயில்.. வெப்ப அலையால் படாத பாடுபடும் இந்தியா! பொசுங்கிடுவோம் போலயே
டெல்லி: இந்தியாவில் இப்போது வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நமது நாட்டில் சில பகுதிகளில் 115 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தையும் தொட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது.
இந்த கோடைக் காலம் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு அதிக வெப்பமானதாக மாறியுள்ளது. கடந்த பிப். மாதம் முதலே நாட்டின் பல பகுதிகளில் வெப்பம் தொடர்ந்து அதிகமாகவே பதிவாகி வருகிறது.
மே மாதம் பற்றி தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை. இந்த மாதம் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதீத வெப்பத்தால் மதிய நேரங்களில் வெளியே செல்லவே தயங்கும் சூழலே இருக்கிறது.

115 டிகிரி: இதனிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 115 டிகிரி பாரன்ஹூட் வெப்பத்தைத் தொட்டுள்ளது. அதிகபட்சமாக நஜப்கரில் அதிகபட்சமாக 115.5 டிகிரி வரை சென்றுள்ளது. இதனிடையே இந்தியாவில் குறிப்பாக வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வெப்ப அலை தொடர்ந்து இருக்கும் என்றே கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு வெப்ப அலை எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. ரிட்ஜ், சஃப்தர்ஜங் எனப் பல இடங்களில் வெப்பம் அசால்டாக 105 டிகிரி பாரன்ஹூட் வெப்பத்தைத் தொட்டுள்ளது.
வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வெளியே செல்லும் போது, உடல் உறுப்புகள் நேரடியாக வெயிலில் படக் கூடாது. முகம், கை, கால்களை மெல்ல உடைகளைக் கொண்டு மூட வேண்டும்.
கடுமையான வெப்பத்தால் உடலில் நீரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் அடிக்கடி தண்ணீரைக் குடிக்கும்படி வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், வெளியே செல்லும் போது சன் ஸ்கீரனை பயன்படுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு: வட இந்தியாவில் மட்டுமே இந்த நிலை என்று நினைத்துவிட வேண்டாம். தமிழ்நாட்டிலும் கூட கிட்டதட்ட இதே நிலை தான். தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வெப்பம் உச்சத்தில் தான் இருக்கிறது. இடையில் மோச்சா புயல் காரணமாகச் சற்று மழை பெய்தது. அதன் பிறகு சூரியன் கருணையே இல்லாத வகையில் தகித்து வருகிறது. சென்னையில் 105 டிகிரி வரை கூட வெப்பம் தொட்டது.

கோடைக் காலம் முடியும் வரை வெப்பம் அதிகமாகவே இருக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக மதியம் 12.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். தாகமாக இல்லையென்றாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். முடிந்த வரை ஜீன்ஸ் உள்ளிட்ட இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை: வெளியே செல்லும் போது நிச்சயம் உடன் தண்ணீர் பட்டிலை எடுத்துச் செல்லுங்கள். மயக்கம் ஏற்படுவது போல உணர்ந்தால் அருகே உள்ள மருத்துவரை அணுக வேண்டும். வீடுகளிலேயே இருந்தாலும் கூட வெப்பம் அதிகமாக இருப்பதால் லஸ்ஸி, மோர் உள்ளிட்டவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
நம் குளிர்ச்சியாக வைத்திருப்பது போல வீட்டையும் குளிர்ச்சியாக வைத்திருங்கள்.. இரவில் ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். குளிர்ச்சியான நீரில் தினசரி ஓரிருமுறை குளிக்கலாம். இது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும்.












Click it and Unblock the Notifications