தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை.. நகரும் காற்றழுத்த தாழ்வு .. மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் ராமநாதபுரம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ராமநாதபுரம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோரங்களில் 850 விசைப்படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் தமிழ்நாட்டில் வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்றைய தினம் வலுவடைந்தது.
தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்ததாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கை கடற்கரையை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை அதிகாலை தென்கிழக்கு இலங்கை கடற்பகுதியை காற்றுழுத்த தாழ்வு மண்டலம் சென்றடையும். திருகோணமலைக்கு தென் மேற்கே 455 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்மேற்கே 680 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவிவருகிறது.
இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை நெருங்கும் எனவும், அதன் பின்னர் தெற்கு இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை, மற்றும் நாளை மறுதினம் என 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழகத்தில் கனமழை பெய்ய கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளையத்தினம் தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
நாளை முதல் 3ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா இலங்கைக் கடற்கரை, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதி மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும என்பதால் ராமநாதபுரம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 850க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.