பாஸ்டேக்கிற்கு ரூ.1,000 இலவச ரீசார்ஜ்.. டோல்கேட் கழிவறையை போட்டோ எடுத்து அனுப்பினால் போதும்
டெல்லி: சுங்கச்சாவடிகளில் சுத்தமின்றி இருக்கும் கழிவறைகளின் போட்டோக்களை ‛ராஜ்மார்க் யாத்ரா' செயலியில் பதிவிட்டால் இலவசமாக ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் வழங்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. இது குறுகிய கால சலுகையாக அக்டோபர் 31ம் தேதி வரை மட்டும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எப்படி பயன்படுத்தி கொள்வது? கண்டிஷன்கள் என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் கார் உள்பட பிற வாகனங்கள் சுங்கக்கட்டணம் செலுத்தி வருகின்றன. தற்போது பாஸ்டேக் முறையில் சுங்கக்கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் டோல்கேட்டில் உள்ள கழிவறைகளை வாகனங்களில் செல்வோர் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த கழிவறைகள் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் கழிவறைகள் சுத்தமாக இருப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டோல்கேட்டுகளில் கழிவறைகள் சுத்தமின்றி இருந்தால் அதனை போட்டோவாக எடுத்து அனுப்பினால் பாஸ்டேக்கில் ரூ.1,000 இலவசமாக ரீசார்ஜ் செய்யப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. இதன்மூலம் புகார்கள் செல்கிறது என்று கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை நம்புகிறது.
இந்த அசுத்தமான கழிவறையை போட்டோ எடுத்து பதிவிட்டு பாஸ்டேக் ரூ.1000 ரீசார்ஜை பெற சில வழிமுறைகள் உள்ளன. அதன்படி முதலில் வாகன ஓட்டிகள் Rajmargyatra appயை பயன்படுத்த வேண்டும். அதன்பிறகு டோல்கேட்டில் சுத்தமில்லாத கழிவறையை செயலியை பயன்படுத்தி போட்டோ எடுத்து லோகேஷன், வாகன பதிவெண், பெயர் விவரங்களை பதிவிட்டு அனுப்ப வேண்டும். குறிப்பாக போட்டோவில் எடுத்த நேரம், இடம் (Geo-tagged and Time-Stamped images ) உள்ளிட்டவை பதிவாகி இருக்க வேண்டும்.
இப்படி அனுப்பி வைப்போருக்கு ரூ.1000 பாஸ்டேக் ரீசார்ஜ்ஜாக வழங்கப்படும். இந்த ரூ.1,000 என்பது வாகன பதிவெண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள பாஸ்டேக்கிற்கு வழங்கப்படும். இந்த தொகையை வேறு விஷயத்துக்கு பயன்படுத்த முடியாது. பாஸ்டேக் பயன்பாட்டுக்கு மட்டுமே ‛யூஸ்' செய்ய முடியும்.
அதேபோல் கட்டுப்பாடு என்பது இந்த காலக்கட்டத்தில் ஒரு பதிவெண் கொண்டவர் ஒருமுறை மட்டுமே இந்த ரீசார்ஜ் வசதியை பெற முடியும். அதேபோல் ஒரு நாளில் ஒரு இடத்தில் உள்ள டோல்கேட்டின் கழிவறை சுத்தமில்லை என ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டோ அனுப்பு புகார் வழங்கினால் அதில் முதலாவது அனுப்பிய நபருக்கே ரூ.1,000 கிடைக்கும். மற்றவர்களுக்கு கிடைக்காது.
இந்த சலுகை என்பது அக்டோபர் 31ம் தேதி வரை மட்டுமே தொடரும். அதுவும் தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் உள்ள டோல்கேட் கழிவறைகளுக்கு மட்டுமே பொருந்தும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையங்கள், டாபாக்கள், ஹோட்டல் உள்ளிட்டவற்றின் டாய்லெட் போட்டோக்களுக்கு இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications