என்றேனும் ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் இந்தியாவின் பிரதமராவார்... ஓவைசி பேச்சு
டெல்லி: இந்திய தேசத்தின் பிரதமராக என்றேனும் ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் பதவி ஏற்பார் என மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஓவைசி கூறியுள்ளார்.
இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் இஸ்லாமியர் ஒருவரே பிரதமராவார்; அப்படி ஒரு நிலைமை உருவாகிவிடக் கூடாது என்பது இந்துத்துவவாதிகளின் கருத்து.
அண்மையில் நடைபெற்ற சாமியார்கள் சங்கமம் நிகழ்ச்சியில் இதனைக் குறிப்பிட்டே இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டும் வகையில் பேசினர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது: இந்திய நிலத்தில் பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிகளுக்கு செல்வர்; மாவட்ட ஆட்சியாளர்களாக வருவார்கள்; மாஜிஸ்திரேட்டுகளாக, மருத்துவர்களாக, பெண் தொழில்முனைவோராக உருவெடுப்பார்கள்.
இந்தியாவின் பிரதமராக என்றேனும் ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் பதவி ஏற்பார். அன்று நான் உயிரோடு இருப்பேனா இல்லையா என்பது தெரியாது. ஹிஜாப் அணிவது தொடர்பாக பெற்றோரிடம் பெண்கள் தெரிவிக்க வேண்டும். பெற்றோரும் அதனை ஆதரிக்க வேண்டும். அப்படி செய்யும் போது யாராலும் நம்மை தடுக்க முடியாது. இவ்வாறு ஓவைசி கூறினார்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது நாடு முழுவதும் மிகப் பெரும் சர்ச்சையாகிவிட்டது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.