ஹிந்தி அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான மொழி.. ஹிந்தி திவாஸில் மத்திய உள்துறை அமித்ஷா பேச்சு
டெல்லி: ஹிந்தி என்பது எந்த உள்ளூர் மொழிகளுக்கும் எதிரி இல்லை. ஹிந்தி அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் நண்பன். ஹிந்தி அலுவல் மொழி மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான மொழியாக இருக்கிறது என டெல்லியில் நடந்த ஹிந்தி திவாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
நம் நாட்டின் அலுவலக மொழியாக ஹிந்தி 1949ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 75வது ஹிந்தி திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் டெல்லியில் நடந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
'ஹிந்தி திவாஸ்' அன்று, மத்திய உள்துறை அமைச்சரும், ஒத்துழைப்பு அமைச்சருமான அமித் ஷா, இந்தி மற்றும் எந்த உள்ளூர் மொழிக்கும் இடையே போட்டி இல்லை. மாறாக, இந்தி ஒரு நண்பர் என்று கூறினார். இந்த ஆண்டு ஹிந்தி திவாஸ் நம் அனைவருக்கும் முக்கியமானது. ஏனென்றால் இந்திய அரசியலமைப்பு சபை ஹிந்தி மொழியை அதிகாரப்பூர்வ அலுவலக மொழியாக ஏற்று இன்றுடன் 75வது ஆண்டு நிறைவு பெறுகிறது. தற்போது நாம் வைர விழாவை கொண்டாட உள்ளோம்.
ஹிந்தி என்பது அலுவல் மொழியாக இருப்பது மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான மொழியாக இருக்கிறது. ஹிந்தி பல ஏற்ற தாழ்வுகளை கடந்து வந்துள்ளது. இன்று ஹிந்திக்கும் பிற உள்ளூர் மொழிகளுக்கும் போட்டி என்பது இல்லை என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். ஹிந்தி எந்த மொழிகளுக்கும் போட்டி மொழி கிடையாது. அனைத்து மொழிகளுக்கும் ஹிந்தி நண்பனாகும். அதாவது குஜராத்தி, மராத்தி, தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் ஒவ்வொரு மொழியும் ஹிந்திக்கு வலு சேர்க்கிறது. அதேபோல் ஹிந்தியும் ஒவ்வொரு மொழிகளுக்கும் பலம் தருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடியின் தலைமையில் ஹிந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை வலுப்படுத்த நிறைய பணிகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி பல சர்வதேச அரங்குகளில் ஹிந்தியில் உரையாற்றுகிறார். இதன்மூலம் ஹிந்தியின் முக்கியத்துவத்தை அவர் உலகிற்கு எடுத்துரைத்து வருகிறார். அதுமட்டுமின்றி ஒவ்வொருவருக்கும் மொழிகள் மீதான ஆர்வத்தை பிரதமர் மோடி அதிகப்படுத்தி உள்ளார்.
வரும் நாட்களில் அலுவல் மொழித் துறை சார்பில் ஹிந்தியில் இருந்து 8 வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்யும் வகையிலான போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் கடிதம், பேச்சு என எதுவாக இருந்தால் நாம் விரும்பும் மொழிக்கு மொழிப்பெயர்க்க முடியும். இதற்காக ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications