உள்நாட்டுப் பாதுகாப்பு.. தோவல் உள்ளிட்டோருடன் அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை!
டெல்லி உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று அவசர ஆலோசனை நடைபெற்றது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக்குழு ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலர் ராஜீவ் கௌபா மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
கச்சா எண்ணெய் இறக்குமதி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது ஆகிய பிரச்சினைகள் குறித்து அமித்ஷா நேற்று முன்தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய சூழலில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களின்போது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம், 35-ஏ மற்றும் 370 சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்டவை உறுதியாக அமல்படுத்தப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அமித் ஷா, உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் கடந்த சனிக்கிழமை சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பது, மாவோயிஸ்ட்களை தடுப்பது, இவர்கள் மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.