வாவ்! சாதித்த ஸ்டாலின்.. முதல் முறையாக தமிழ் + 14 மொழிகளில் CAPF தேர்வு.. கோரிக்கையை ஏற்ற அமித் ஷா!
டெல்லி : சிஏபிஎஃப் தேர்வுகள், தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிஏபிஎஃப் தேர்வு : இந்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் மத்திய ஆயுதப்படைப் பிரிவில் மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவை உள்ளன. மத்திய ரிசர்வ் காவல் படையின், 9,223 காவலர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இதில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன.

இப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம் : சிஆர்பிஎஃப் பணிக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆங்கிலம், இந்தியில் மட்டும் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு, தேர்வு எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையை பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் சமவாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்,

இந்தத் தேர்வு இந்தி பேசுவோருக்கே சாதகமாக உள்ளது, இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு எதிரானது. இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சிஆர்பிஎஃப்-ல் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இத்தேர்வை நடத்த ஏதுவாக அறிவிக்கையில் மாற்றம் செய்ய சிஆர்பிஎஃப் அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
புதிய அறிவிப்பு : இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் சிஏபிஎஃப் தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் 15 மொழிகளில் சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்பு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இனி மாநில மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பின் மூலம் லட்சகணக்கணக்கான இளைஞர்கள் பயன்பெற உள்ளனர்.












Click it and Unblock the Notifications