"அவர் அச்சமின்றி செயல்படுவார் என நம்புகிறேன்!" திரௌபதி முர்முவுக்கு யஷ்வந்த் சின்ஹா வாழ்த்து
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றதற்கு திரௌபதி முர்முவை எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறங்கிய யஷ்வந்த் சின்ஹா வாழ்த்தி உள்ளார்.
நாட்டின் குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யக் கடந்த ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது

குடியரசு தலைவர் தேர்தல்
இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் அறிவிக்கப்பட்டனர். இரு வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர். திரௌபதி முர்முவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளித்தனர்.

வாக்கு எண்ணிக்கை
கடந்த ஜூலை 18ஆம் தேதி காலை 10 மணிக்கு முதல் மாலை 5 மணிக்கு டெல்லி நாடாளுமன்றம் மற்றும் மாநிலத் தலைமைச் செயலகங்களில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது. இதையடுத்து வாக்குப் பெட்டிகள் கடந்த 18ஆம் தேதி மாலை விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டன. குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.

அதிக வாக்குகளை
எதிர்பார்த்ததை காட்டிலும் திரௌபதி முர்முவுக்கு அதிகமான வாக்குகளே கிடைத்துள்ளது. மூன்றாம் சுற்றின் முடிவில் திரௌபதி முர்மு 50%க்கும் அதிகமான வாக்குகளைத் தாண்டினார். இதன் மூலம் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர் 2161 வாக்குகளையும் யஷ்வந்த் சின்ஹா 1058 வாக்குகளையும் பெற்றுள்ளார்கள்.

யஷ்வந்த் சின்ஹா வாழ்த்து
திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 5,77,777 ஆகும். இதையடுத்து திரௌபதி முர்முவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவும் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
Recommended Video

அச்சமின்றி செயல்படுவார்
இது தொடர்பாக யஷ்வந்த் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், "2022 குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதற்கு எனது சக குடிமக்களுடன் இணைந்து நானும் அவரை வாழ்த்துகிறேன். நாட்டின் 15ஆவது குடியரசு தலைவராக அவர் எவ்வித அச்சமும் இல்லாமல் அரசியலமைப்பின் பாதுகாவலராகச் செயல்படுவார் என இந்தியா நம்புகிறது" என்று சின்ஹா ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications