Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு செல்லும்- ரிசர்வேசன் முறைக்கே பேராபத்தா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது உயர்ஜாதியினரில் அல்லது பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மத்திய பாஜக அரசு வழங்கி வரும் 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன் உரிமைக்கு எதிரானது என்பது சமூக நீதி ஆதரவாளர்களின் கருத்து.

நாடு விடுதலை அடைந்து இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட நிலையில் கல்வி, வேலைவாய்ப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்ய வேண்டும் என்ற முதல் குரலை தமிழ்நாட்டில் தந்தை பெரியார் எழுப்பினார். 1950களில் இது தொடர்பான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனடிப்படையில் நாட்டின் அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இடஒதுக்கீடும் தமிழகமும்

இடஒதுக்கீடும் தமிழகமும்

இந்திய அரசியல் சாசனத்தின் முதல் திருத்தமானது குடிமக்கள் சமூகத்திலும் கல்வியிலும் பின் தங்கியுள்ள எந்த வகுப்பினருக்கும், அல்லது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடியினருக்கும் அவர்களின் முன்னேற்றங்கருதி அரசு எந்தத் தனி எற்பாட்டினைச் செய்வதையும் இந்த விதியின் ஒரு பிரிவோ அல்லது விதி 29-ன் 2-வது உட்பிரிவோ தடை செய்யாது என்பதுதான். அதாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்தது நாட்டின் அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம். இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படை என்பது கல்வி ரீதியாக, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வரையறையைக் கொண்டது. இடஒதுக்கீட்டுக்கு அடிப்படை பொருளாதார அளவு கோல் இல்லை என்பதை தெளிவுபடுத்தியது அரசியல் சாசனம். 1980களில் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சியில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது என்ற போராட்டங்கள் வெடித்ததால் எம்ஜிஆர் அரசு பின்வாங்கிவிட்டது.

 மண்டல் கமிஷனும் இடஒதுக்கீடும்

மண்டல் கமிஷனும் இடஒதுக்கீடும்

அரசியல் சாசனத்தின் இந்த முதல் திருத்தத்தின் அடிப்படையில்தான் இன்றளவும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 1970களின் இறுதியில், சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பின் தங்கியவர்களை அடையாளம் காண்பதற்காக மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த மண்டல் கமிஷன் பரிந்துரைதான் பல கோடி இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களி, பணிகளில் முற்படுத்தப்பட்ட சமூகம்தான் அத்தனை பதவிகளையும் வாய்ப்புகளையும் அனுபவித்து வந்தது. அதில் வெறும் 27% மட்டும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதுதான் மண்டல் கமிஷன் பரிந்துரை. அதாவது கல்வி, சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு.. இங்கே பொருளாதார அளவு கோல் கொண்டுவரப்படவில்லை.

50% இடஒதுக்கீடும் 69% இடஒதுக்கீடும்

50% இடஒதுக்கீடும் 69% இடஒதுக்கீடும்

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வரமாக கிடைத்த மண்டல் கமிஷனுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த போதுதான், இடஒதுக்கீடு தேவைதான்.. ஆனால் இடஒதுக்கீடு அளவு 50%-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் மண்டல் கமிஷன் வழக்கில் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் தமிழகத்தில் இடஒதுக்கீடு அளவு 69% ஆக மாற்றப்பட்டு அது ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அரசியல் சாசனப் பாதுகாப்பை பெற்றது. அதனால்தான் தமிழகம் இன்றைக்கும் சமூக நீதியின் தாய்நிலமாக இருக்கிறது.

 பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு

பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு


இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக, கல்வி ரீதியாக ஒடுக்கப்பட்ட அல்லது பின் தங்கிய மக்களின் மேம்பாட்டுக்கானது. இதில் எங்கேயும் பொருளாதார அளவு கோல் கிடையாது. ஆனால் இந்துத்துவா சக்திகள் அல்லது உயர்ஜாதி மேலாதிக்கத்தை விரும்புகிற- ஜாதிய கட்டமைப்பை பேணி பாதுகாக்க விரும்புகிற சமூக அநீதியாளர்கள்தான், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும்; இடஒதுக்கீடே கூடாது என்கிற குறுக்குசால்களை ஓட்டிக் கொண்டிருந்தனர். இத்தகைய சித்தாந்தத்தை அடிப்படையாக பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நிலையில், முன்னேறிய அல்லது முற்படுத்தப்பட்ட அல்லது உயர்ஜாதியினரில் ஏழைகள் (ஆண்டுவருமானம் ரூ8 லட்சம் வரம்புக்குள் வருகிறவர்கள்) என்ற ஒரு பிரிவை உருவாக்கி அவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது. அதாவது சோ கால்ட் உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின் தங்கிய- ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடாம்.

10% இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு ஏன்?

10% இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு ஏன்?

இந்த பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு முறையானது சமூக ரீதியாக, கல்வி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டியது இடஒதுக்கீடு என்கிற அரசியல் சாசனத்துக்கு நேர் எதிரானது. அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இதனைத்தான் 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் திமுக உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்தன. மேலும் ஏற்கனவே உச்சநீதிமன்றமானது இடஒதுக்கீடு அளவானது 50%-க்கும் அதிகமாக இருக்கக் கூடாது என தீர்ப்பளித்திருக்கிறது. பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் போது இந்த 50% வரம்பு மீறப்படுவதால் பெரும் குழப்பம் உருவாகிவிட்டது; இதனால் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு முறையே நிர்மூலமாக்கப்படுகிற பேரபாத்து உள்ளது எனவும் வாதிடப்பட்டன.

10% இடஒதுக்கீடு செல்லுமாம்

10% இடஒதுக்கீடு செல்லுமாம்

தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கி உள்ளனர். சாராம்சமாக, பொருளாதார அடிப்படையிலான உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு செல்லும்; 50% இடஒதுக்கீடு அவசியமில்லை என்பதுதான் இன்றைய தீர்ப்பு. அதாவது நாட்டில் உயர்ஜாதி எனப்படுகிற முற்படுத்தப்பட்ட வகுப்பில்தான் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகள் இருப்பது போலவும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் பொருளாதாரத்தில் ஏழைகள் இல்லை என்கிற தொனியை உறுதி செய்கிறது இத்தீர்ப்பு. உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு சரி எனில் இதர பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் பின் தங்கிய வர்களுக்கு இடஒதுக்கீடு என்பது சரிதானே? என்ற கேள்வி இயல்பாகவே எழக் கூடியது.

 இடஒதுக்கீட்டு முறைக்கே சவக்குழி?

இடஒதுக்கீட்டு முறைக்கே சவக்குழி?

அதனால்தான் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ரவீந்தர பாட், முற்படுத்தப்பட்டோரில் அதாவது உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லாது; பொருளாதார அடிப்படையிலான இந்த இடஒதுக்கீட்டை நமது அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை. இது சமூக நீதிக்கு எதிரனாது; இடஒதுக்கீடு வழங்க வகை செய்யக் கூடிய அரசியல் சாசனத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது இந்த இடஒதுக்கீடு என ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். நீதிபதி ரவீந்தர பாட்டின் கருத்துதான் இந்திய நிலத்தின் பல கோடி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உள்ள குமுறல்.. பொருளாதார அளவு கோலில் ஒரு 10% இடஒதுக்கீடு கொண்டு வந்து ஒட்டுமொத்த இடஒதுக்கீடு நடைமுறைக்கே சவக்குழி தோண்டி இருக்கிறது மத்திய பாஜக அரசு என்பதுதான் சமூக நீதி ஆதரவாளர்களின் பகிரங்க குற்றச்சாட்டு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+