சத்தம் போடாமல் மிசோரமில் கால் பதித்த பாஜக!
டெல்லி: வட கிழக்கில் பாஜகவின் பரவல் இல்லாத மிசோரம் மாநிலத்தில் ஒரு வழியாக ஒரு எம்.எல்.ஏ. கிடைத்து விட்டார். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலத்தில் இந்த சாதனையைச் செய்துள்ளது பாஜக.
199ம் ஆண்டு முதல் மிசோரமில் போட்டியிட்டு வருகிறது பாஜக. ஆனால் ஒருமுறை கூட அது ஜெயித்ததில்லை. ஆனால் 5 மாநிலத் தேர்தலில் பலத்த சேதத்தை சந்தித்துள்ள நிலையில் மிசோரமில் அது சத்தமில்லாமல் ஒரு எம்எல்ஏவைப் பெற்றுள்ளது.
இந்த ஒற்றை வெற்றியைப் பெற பாஜக கடுமையாக உழைத்திருந்தது. பாஜக மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ்ஸும் களத்தில் இறங்கி வேலை பார்த்தது. அவர்களின் திட்டமிட்ட, புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் இந்த வெற்றி சாத்தியமானது.

இனக் குழுக்கள்
மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள்தான் பெரும்பான்மையினர். தற்போது வெற்றி பெற்றுள்ள புத்தா தன் சக்மா, சக்மா பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர். இவர்கள் சிறுபான்மையினர் ஆவர். இவர் போட்டியிட்டு வென்ற தொகுதியான துய்சவாங் தொகுதியில் சக்மா பழங்குடியினர் அதிகம் உள்ளனர். இதனால்தான் சக்மாவின் வெற்றி சாத்தியமானது.

காங்கிரஸிலிருந்து தாவியவர்
சக்மா, உண்மையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். லால் தன்வாலா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவரும் கூட. தனது இனப் பிரிவைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு சீட் கேட்டு அரசை வற்புறுத்தியபோது அரசு மறுத்து விட்டது (மிஸோ இனத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட அரசு இது). இதனால் கோபமடைந்த சக்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸை விட்டும் விலகினார்.

கப்பென்று கவ்விய பாஜக
விடுமா பாஜக... இதற்காகத்தானே அது காத்திருந்தது. சக்மாவை அணுகி பாஜகவில் அவரை சேர்த்தது. சீட்டும் கொடுத்தது. துய்சவாங் தொகுதியில் சக்மா பழங்குடியினர் தவிர புத்த மதத்தினரும் கணிசமாக உள்ளனர். இவர்களின் வாக்குகளை ஆர்எஸ்எஸ் திரட்டிக் கொடுத்தது. எல்லாம் சேர்ந்து தற்போது மிசோரமில் தாமரை மலர வழி வகுத்துள்ளன.

39ல் போட்டியிட்ட பாஜக
இந்த தேர்தலில் பாஜக முதல் முறையாக 39 தொகுதிகளில் போட்டியிட்டது. ஒன்றில் வென்றுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு தேர்தலில் 17 தொகுதிகளில் அது போட்டியிட்டிருந்தது.

இனக்குழுக்களைச் சேர்த்து
வட கிழக்கில் தன்னால் தனித்து எதுவும் செய்ய முடியாது என்பது பாஜகவுக்குத் தெரியும். இதனால்தான் அது விவரமாக உள்ளூர் குழுக்களையும் தலைவர்களையும் இழுத்து தன் பலமாக மாற்றி வருகிறது. அந்த டெக்னிக்படிதான் மிசோரமிலும் அது கால் பதித்துள்ளது. சக்மா போலவே இன்னொரு இனக் குழுவான மாரா பழங்குடியினரையும் அது தன் பக்கம் ஈர்த்து இந்தத் தேர்தலில் அது போட்டியிட்டது. ஆனால் அது பலன் தரவில்லை.
சக்மா ஒரு பக்கம் வெற்றி பெற்றாலும் கூட மாநில பாஜக தலைவரான ஹுல்னா தான் போட்டியிட்ட தவி தொகுதியில் படு தோல்வி அடைந்துள்ளார். அதாவது டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications