தமிழகத்தில், கோவை, திருப்பூர் உட்பட 4 நகரங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: அமைச்சரவை முடிவு
டெல்லி: தமிழகத்தில் கோவை, திருப்பூர் உட்பட நான்கு நகரங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்குவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக பின்னர் நிருபர்களிடம் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் தெரிவித்தார்.

தமிழகத்தில் மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு நகரங்களில் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்குவதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் அவசர சட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பட்டியலை மறுசீரமைக்க உறுதியளிப்பதாகவும், எந்தவொரு போராட்டத்திற்கும் அவசியமில்லை என்றும் கூறியிருந்தார்.
"சில குழுக்கள் போராடத் தீர்மானித்திருக்கின்றன, அது தேவையில்லை, அரசு நீதி வழங்கும் என்று உறுதியளிக்க விரும்புகிறேன். நாங்கள் 200 புள்ளி இட ஒதுக்கீடு பட்டியலை கொண்டு வருவோம், நாங்கள் இரண்டு நாட்களுக்குள் அதை எப்படியும் தெளிவாக செய்வோம்," என்று மார்ச் 5ல் நிருபர்களிடம் கூறியிருந்தார் ஜவடேக்கர். இந்த நிலையில்தான் அமைச்சரவை குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications