ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட்
டெல்லி: ஈரான் அமெரிக்கா போரால் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம் காரணமாக உலக எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டாலும், இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்கள் தொடர்ந்து பாதுகாப்பாக பயணித்து வருகின்றன. இதற்குப் பின்னால் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி போர் வெடித்தது. இந்த போரின் விளைவாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியது. ஈரான் மற்றும் ஓமன் இடையே இருக்க கூடிய மிக குறுகிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றுகிறது. 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் இந்த வழியாகவே நடக்கிறது.

இந்த வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் உலக அளவில் எரிசக்தி சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. எரிபொருள் விலை உயர்வு, பொருளாதார நிச்சயமற்ற தன்மை என ஆசியா மட்டுமின்றி ஐரோப்பாவையும் ஆட்டம் காண வைத்துள்ளது. ஏப்ரல் 9 ஆம் தேதி ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனாலும், ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது.
எப்படி பாதுகாப்பாக கடக்கிறது?
இந்த கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. இதன்மூலமே இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இன்றி தற்போது வரை நிலமை இயல்பாகவே சென்று கொண்டிருக்கிறது. மேற்கு நாடுகளின் கப்பல்களே இந்த வழியாக கடக்க தண்ணி குடிக்கும் நிலையில், இந்தியா தனது கப்பல்களை எப்படி பாதுகாப்பாக கடக்க வைக்கிறது என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
நேற்று அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள், பதற்றமான கடல் வழித்தடத்தின் ஊடாக இந்தியா எவ்வாறு கப்பல்களின் இயக்கத்தை நிர்வகித்து வருகிறது என்பது குறித்து சில தகவல்களை பகிர்ந்தனர். இது குறித்து துறைமுகங்கள் அமைச்சகத்தின் கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஓபேஷ் குமார் சர்மா கூறுகையில்,
வெளிப்படையாக கூற விரும்பவில்லை
"ஈரானுடன் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகிறோம், முன்னுரிமைகளை எவ்வாறு தீர்மானிக்கிறோம் என்பதை வெளிப்படையாக கூற விரும்பவில்லை. பாதுகாப்பு காரணங்களால் அந்த விவரங்களை பகிர முடியாது. வெளியுறவு அமைச்சகம் மூலமாகவே இந்த ஒருங்கிணைப்பு நடைபெற்று வருகிறது.
கப்பல்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமைகள் எரிசக்தி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான அமைச்சகங்களுடன் இணைந்து தீர்மானிக்கப்படுகிறது. முன்னுரிமை நிர்ணயிப்பதில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், உரங்கள் அமைச்சகம் உள்ளிட்ட துறைகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. அதன் பின்னர் ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன்படி கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் 13 கப்பல்கள் நிற்கிறது
இதன்மூலம் இந்தியா மிகப்பெரிய ஸ்டேட்டர்ஜியை கையாண்டு முன்னுரிமை அடிப்படையில் எந்த கப்பல்களை முதலில் கடக்க வேண்டும் என்று பல துறைகளுடன் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்திய கொடிகட்டிய 13 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிற்பதாகவும், இவற்றில் ஒரு எல்.பிஜி டேங்கர், கச்சா எண்ணெய் ஆயில் டேங்கர் கப்பல்கள் 5, ஒரு ரசாயன அல்லது உற்பத்தி டேங்கர், மூன்று கண்டெய்னர் கப்பல்கள், இரண்டு பல்க் கேரியர்ஸ் கப்பல்கள், ஒரு தூர்வாரும் கப்பல் இருப்பதாக ஷர்மா கூறினார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் அச்சுறுத்தல் நிலவினாலும் அந்த பகுதி வழியாக தொடர்ந்து இந்தியாவின் கப்பல்கள் பயணித்து வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக அதிக எண்ணிக்கையிலான கப்பல்களை இயக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து உள்ளது.












Click it and Unblock the Notifications