"எமர்ஜென்சி" ஞாபகம் இருக்கா! மற்ற தலைவர்கள் பதவி நீக்கத்தை எப்படி சமாளித்தனர்! ராகுல் என்ன செய்யலாம்
டெல்லி: ராகுல் காந்திக்கு முன்பே பல்வேறு அரசியல் தலைவர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தகுதிநீக்கத்தை எப்படி எதிர் கொண்டார்கள். ராகுல் காந்திக்கு இப்போது இருக்கும் வாய்ப்பு என்ன என்பதைப் பார்க்கலாம்.
கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசார சமயத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. அது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு தான் இப்போது ராகுல் காந்திக்கு எதிராக மாறியுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலர் பகுதியில் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் வைத்த அனைவரும் ஒரே போல இருப்பதாகக் கூறி, அடுத்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.

ராகுலுக்குச் சிறை
ராகுல் காந்தி பேச்சுக்கு அப்போதே மிகக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. மோடி சமூகத்தையே ராகுல் காந்தி இழிவுபடுத்திவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், குஜராத் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி என்பவர் இது குறித்து கிரிமனல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்த வந்த நிலையில், நேற்று இதில் தீர்ப்பளிக்கப்பட்டது. ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவித்த மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.

தகுதிநீக்கம்
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மக்கள் பிரதநிித்துவ சட்டத்தின் கீழ் அவர் இப்போது எம்பி பதவியையும் இழந்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 102(1)(இ)யின் விதிகளின்படி, தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து, அதாவது மார்ச் 23, 2023 முதல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், இரண்டு அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

மேல்முறையீடு
தண்டனை காலம் முடிந்த பிறகும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. அதேநேரம் இதுபோல எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட அரசியல்வாதி ராகுல் காந்தி மட்டும் அல்ல. இதற்கு முன்பும் பல அரசியல்வாதிகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்துப் பார்க்கலாம். பஞ்சாப் அரசியல்வாதியும் முன்னாள் பஞ்சாப் அமைச்சருமான ஜாகிர் கவுர் தனது மகளை வலுக்கட்டாயமாகக் கடத்தி கருக்கலைப்பு செய்து குற்றத்திற்காக கேபினட் பதவியை இழந்தார். மேல்முறையீடு செய்ததில் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஒதுங்கிய லாலு பிரசாத் யாதவ்
அக்டோபர் 2013இல், லாலு பிரசாத் யாதவ் லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அடுத்த 11 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. மாட்டுத்தீவன வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் தண்டனை முடிந்து ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் 11 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அரசியல் அரங்கில் இருந்தே அவர் ஒதுங்கும் சூழல் உருவானது. இப்போது சிறையில் இருந்து ஜாமீன் பெற்றுவிட்ட அவர் வயது மூப்பு மற்றும் உடல்நிலை கோளாறு காரணமாக அரசியல் அரங்கில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார்.

வந்தது எமர்ஜென்சி
தேர்தல் பிரசாரத்திற்கு அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி குற்றவாளி என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 1991 தேர்தலில் அவரது செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து ரேபரேலி தொகுதி எம்பி பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். மேலும், அடுத்த ஆறு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்திரா காந்தி பிரதமர் பதவியையும் இழந்தார். இந்த தீர்ப்பு வந்த சில நாட்களில் தான் நாடு முழுக்க எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது.

ஜெயலலிதா
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவும் இந்தச் சட்டத்தால் தனது பதவியை இழந்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவைக் குற்றவாளியாக அறிவித்தது. அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அப்போது முதல்வர் பதவியில் இருந்த ஜெயலலிதா அந்த பதவியை இழந்தார்.

என்ன ஆனது
மேலும், இதன் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலும் ஏற்பட்டது. இருப்பினும், மேல்முறையீட்டில் அவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். இதனால் அவர் 2016 தேர்தலில் போட்டியிட்டு வென்று, தமிழ்நாடு முதல்வராகவும் தேர்வானார். ஜெயலலிதா உயிரிழந்த பின்னரே இதில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து தண்டனை அறிவிக்கப்பட்டது. அப்போது அவர் உயிரிழந்துவிட்டதால் இறுதித் தீர்ப்பில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

மற்ற தலைவர்கள்
இதேபோல தேர்தல் செலவுகளை முறையாகக் கணக்குக் காட்டவில்லை என்று, கடந்த 2007 உத்தரப்பிரதேச மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பிசௌலி தொகுதியில் போட்டியிட்டு வென்ற உம்லேஷ் யாதவ், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நரோத்தம் மிஸ்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். உத்திரப் பிரதேச எம்எல்ஏக்கள் பஜ்ரங் பகதூர் சிங் மற்றும் உமா சங்கர் சிங் எடுத்தாக தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட லட்சத்தீவு எம்பி முகமது பைசல், காங்கிரஸ் ரஷீத் மசூத், ஜனதா தளம் (யுனைடெட்) தலைவர் ஜெகதீஷ் சர்மா, பாஜகவின் ஆஷா ராணி, சுரேஷ் ஹல்வான்கர் எனப் பல அரசியல்வாதிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே வழி
இவர்களில் பலரும் மேல்முறையீடு செய்து தங்கள் தண்டனையை நிறுத்தி வைத்துவிட்டனர். சிலர் தங்கள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கவும் பட்டனர். இப்போது இதே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தான் ராகுல் காந்தியும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனவே ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து தனது தண்டனைக்குத் தடை பெற்றால் தகுதி நீக்கத்தில் இருந்தும் தப்பிக்க முடியும்.












Click it and Unblock the Notifications