"காதல் மந்திரம்.. உகான்டா லவ் குருக்கள்.." இந்திய பெண்களை குறிவைத்து.. வேலையை காட்டிய நைஜீரியர்கள்
டெல்லி: நமது நாட்டில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு டைப்பில் பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படியொரு புது ரக மோசடி சம்பவம் தான் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நாட்டில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் என்று பொதுவாக ஒரு பேச்சு உள்ளது. நாட்டில் ஒவ்வொரு முறையும் இப்படி டிசைன் டிசைனாக ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள்.
அப்படித்தான் இங்கு ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு டைப்பிலும் ஏமாற்ற வந்து கொண்டாரே இருப்பார்கள். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அதுபோன்ற ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. நன்கு படித்த டாக்டர் ஒருவரே அவர்களிடம் ஏமாற்றியுள்ளார் என்பதே இதில் பெரும் துயரம்.
68 வயசு.. வாட்ஸ்அப் வழியாக உல்லாசம்! வீடியோ காலில் சிக்கிய தொழிலதிபர்! ரூ.2.7 கோடி பணம் காலி
தெலங்கானா மருத்துவர்
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்த கண் மருத்துவர், இளைஞன் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.. இருப்பினும், அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல தொழிலிலும் இந்த மருத்துவருக்குப் பெரிய பிரேக் கிடைக்கவில்லை. இதனால் துயரத்தில் இருந்த இந்த பெண், தனது காதல் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை ஓவர் நைட்டில் தீர்க்க என்ன வழி எனப் பார்த்துள்ளார். அப்போது இணையத்தில் அவர் "காதல் மந்திரவாதி" என்று செர்ச் செய்துள்ளார்.. அப்போது தான் அவர் இணையத்தில் இருந்து ஒரு காதல் மந்திரவாதிகளின் மொபைல் எண்களை அவர் எடுத்துள்ளார்.
காதல் மந்திரம்
அவர்களிடம் பேசிய போது தங்களை இருவரும் லவ் குரு என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். தாங்கள் உகாண்டாவை சேர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கு சில ரகசிய காதல் மந்திரங்கள் தெரியும் என்றும் கூறி நம்ப வைத்துள்ளனர். இந்த காதல் மந்திரங்களைப் போட்டால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் கூட எளிதாகச் சரியாகிவிடும் என்று கூறி அந்த மருத்துவரை நம்ப வைத்துள்ளனர். மேலும், இதற்கு ரொம்ப எல்லாம் செலவு செய்யத் தேவையில்லை என்றும் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாலே காதல் மந்திரத்தைப் போடுவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
ஏமாற்றிய மருத்துவர்
ஏற்கனவே பிரச்சினை தலைக்கு மேல் இருப்பதால் குழம்பிப் போய் இருந்த அந்த மருத்துவர், காதல் மந்திரம் போட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்று அவர்கள் கூறியதை அப்படியே நம்பிவிட்டார். உடனடியாக அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் அனுப்பிவிட்டார். அதன் பிறகு அது இது என பல்வேறு காரணங்களைச் சொல்லி மருத்துவரிடம் இருந்து அப்படியே மெல்ல 12.25 லட்ச ரூபாய் வரை ஏமாற்றி கரைந்துள்ளனர். இந்த மருத்துவரும் பிரச்சினை சரி ஆனால் போதும் எனத் தொடர்ந்து அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்தே வந்துள்ளார்.
புகார்
அவர்கள் கேட்கும் பணத்தைத் தொடர்ந்து கொடுத்தாலும் கூட தனது காதல் வாழ்க்கை அவருக்குச் சந்தோஷமாக மாறவில்லை.. அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அந்த மருத்துவர் உணர்ந்துள்ளார். இதையடுத்து அவர்களிடம் தொடர்பு கொண்டு பணத்தைக் கேட்டதற்கு அவர்கள் பணம் தர மறுத்ததாகத் தெரிகிறது.. இதையடுத்து வேறு வழியில்லாமல் அந்த மருத்துவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார். விசாரணையைத் தொடங்கினர். அதில் மருத்துவரை ஏமாற்றிய இருவரும் இப்போது டெல்லியில் இருப்பது தெரிய வந்தது.
கைது
இதையடுத்து விரைந்து டெல்லி சென்ற போலீசர், அந்த இருவரையும் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒக்வுச்சுக்வு (41) மற்றும் ஒபிவுரு ஜொனாதன் உசாகா (35) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் தங்களை உகாண்டாவை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டாலும் அவர்கள் உண்மையில் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். தலைமறைவாக உள்ள மிச்சாலா அஜுண்டா மற்றும் டேனியல் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இதையடுத்து அவர்களை ஐதராபாத் அழைத்து வந்த போலீசார், அவர்களிடம் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நாடு முழுக்க மோசடி
கைது செய்யப்பட்டுள்ள இருவரும் இப்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 4 பேரும் துணி வியாபாரத்திற்காக இந்தியாவுக்கு வந்துள்ளனர். இருப்பினும், திறம்படத் தொழிலைச் செய்யாததால் அவர்களால் துணி வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் சம்பாதிக்க முடியவில்லை. அதன் பின்னர் அப்பாவி மக்களைக் குறிவைத்து ஏமாற்றத் தொடங்கியுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.. தங்களை லவ் குரு என அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவர்கள் இணையதளம் வாயிலாக இப்படி நாடு முழுக்க பல மோசடிகளை நடத்தியுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.