தொழிலாளர்களுக்கு ஓடிஓடி உதவிய முதலாளி.. மறைந்தாலும் மனதை விட்டு நீங்காத ரத்தன் டாடாவின் மனிதநேயம்
டெல்லி: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் காலமான நிலையில் வாழும்போதே கோடிகளை கொட்டி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து உதவி வந்தார். இயல்பிலேயே அவர் ஏழைகளுக்கு உதவி செய்யும் குணத்தை கொண்ட ரத்தன் டாடாவின் கொடுத்த நன்கொடை, அவர் செய்த மனிதநேய செயல்கள் பற்றிய விபரம் வருமாறு:
இந்தியாவில் பிரபல தொழிலதிபராக வலம் வந்தவர் ரத்தன் டாடா. இவருக்கு வயது 86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரா ரத்தன் டாடா மும்பையில் வசித்து வந்தார்.

இந்நிலையில் தான் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை ரத்தன் டாடா மறுத்தார்.
இந்நிலையில் தான் ரத்தன் டாடா மும்பையில் பிரிட்ஸ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரத்தன் டாடா 1937 ம் ஆண்டு சூரத்தில் பிறந்தார். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஸ்ட்ரெக்சரல் இன்ஜினியரிங் படிப்பை முடித்த அவர் டாடா குழுமத்தில் இணைந்தார். அதன்பிறகு டாடா சன்ஸ் தலைவராக 1991ம் ஆண்டில் பொறுப்பேற்று இந்திய தொழில்துறையில் அசைக்க முடியாத சக்தியாக மாறினார்.
சொந்த கார் என்ற கனவு ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருந்ததை மாற்றியவர் ரத்தன் டாடா. இவர் ரூ.1 லட்சத்தில் டாடா நானோ காரை அறிமுகம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் ஆண்டுதோறும் நன்கொடைகளை அள்ளி கொடுத்தார். பல்வேறு அறக்கட்டளைகளுக்கு டாடா நிறுவனம் சார்பில் கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் பயன்பெற்றனர்.
மேலும் இந்தியாவில் கல்வி, மருத்துவம், குடிநீர், விவசாய துறைகள் மீது ரத்தன் டாடாவுக்கு தனி அக்கறை என்பது இருந்து வந்தது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் கல்வி, மருத்துவம், குடிநீர், விவசாயத்துக்கு தேவையான உதவிகளை தனது நிறுவனம் மூலம் ரத்தன் டாடா வழங்கினார்.
மேலும் ரத்தன் டாடா படித்த கார்னெல் பல்கலைக்கழத்தில் இந்தியர்கள் சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கும் உதவி செய்தார். சொந்த பணத்தை கார்னெல் பல்கலைழக்கத்துக்கு வழங்கி பலரது மேல்படிப்புக்கு உதவி செய்தார். மேலும் கிராமப்புற கல்வி மேம்பாட்டுக்காக நன்கொடை கொடுத்தார்.
மேலும் நம் நாட்டில் கொரோனா மிக தீவிரமாக பரவிய காலத்தில் ரூ.500 கோடியை நன்கொடையாக அறிவித்து அனைவரையும் வியக்க வைத்தார். இந்த சமயத்தில் அவரது நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்கள், ஊழியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சலுகைகள், சம்பளத்தை முறையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பெரும் கோடீஸ்வரராக இருந்தாலும் கூட ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் மீது அக்கறையுடனே வாழ்ந்து தனது சகாப்தத்தை முடித்து கொண்டவர் தான் ரத்தன் டாடா. இதனால் ரத்தன் டாடாவை தொழிலாளிகளின் முதலாளி என்றே பலரும் அழைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications