பெரிய ரிஸ்க்! பக்கா பிளான் உடன் இறங்கும் டாடா.. அப்படியே குறைய போகுது கார் விலை! அதெப்படி தெரியுமா
டெல்லி: டாடா நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கைகளால் இந்தியாவில் அடுத்து வரும் ஆண்டுகளில் கார்களின் விலை கணிசமாகக் குறையும் என்று எதிராபர்க்கப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை என்பது பல மாதங்களாக உயர்த்தப்படவில்லை என்றாலும் கூட அது அதிகமாகவே உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ 100 தாண்டியே உள்ளது.
டீசல் விலையும் கூட ரூ.100ஐ நெருங்கியே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவே இந்தியாவிலும், பெட்ரோல் டீசல் விலை மாறுகிறது.
இப்பவே இப்படியா? நீங்க வந்தா மட்டும் போதும்! மாஜிக்களுக்கு வாய்ப் பூட்டு! எடப்பாடி & கோ கப்சிப்!
மின்சார கார்கள்
இதனால் ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுவும் இப்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது. இதனால் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இப்போது மின்சார வாகனங்களை நோக்கி அதிகம் வருகின்றனர். நாட்டில் இரு சக்கர வாகனங்கள் மெல்ல மின்சார வாகனங்களாக மாறி வருகிறது.
குறைந்த விலை
ஆனால், இந்தியாவில் கார் சந்தை அப்படி பெரியளவில் எந்தவொரு மாற்றத்தையும் சந்திக்காமலேயே உள்ளது. அதற்கு முக்கிய காரணமாக காரின் விலை தான். பெட்ரோல் கார் 7 லட்சத்தில் இருக்கிறது என்றால் மின்சார கார் 12 லட்சத்தில் தான் இருக்கிறது. இதுவே மின்சார கார் சந்தை அதிகரிக்காமல் இருக்கக் காரணமாக உள்ளது. ஆனால் இந்த நிலைமை மாற்ற டாடா தீவிரமாக முயல்கிறது.
பெரிய ரிஸ்க்
இப்போது இந்தியாவில் மின்சார கார் சந்தையில் டாடாவுக்கு 88% பங்குகள் உள்ளன. அதுவும் நெக்சான் மற்றும் டிகோர் என இரண்டு மாடல்களை வைத்து இதைச் சாதித்து உள்ளது. அடுத்தாக எம்ஜி-இன் ZS EV வெகு தூரத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளன. இவை அனைத்தும் 12 லட்சத்திற்கும் மேல் இருக்கும் கார் தான். இந்தச் சூழலில் டாடா மீண்டும் புதிய ரிஸ்க் எடுக்கிறது. டியாகோ என்ற புது வகை காரை வெறும் 8.50 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
போட்டி இல்லை
மின்சார துறையில் இத்தனை காலமாக டாடாவுக்கு போட்டியாளரே இல்லை என்று சொல்லலாம். இப்போது தான் மகேந்திரா நிறுவனம் XUV400 என்ற புதிய காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இது நெக்சான் மின்சார காருக்கு போட்டி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேப்பரில் பார்க்கும்போது XUV400 நல்ல காராக தோன்றினாலும் விற்பனைக்கு வரும் போது தான் முழு தகவல்கள் தெரிய வரும்.
எதற்காக இந்த முயற்சி
பெட்ரோல் கார் சந்தையில் விட்ட இடத்தை மின்சார காரில் பிடிக்க டாடா முயல்கிறது. இதனால் தான் மற்ற நிறுவனங்கள் வரும் முன்னரே டாடா குறைந்த விலையில் மின்சார காரை அறிமுகப்படுத்தி உள்ளது. டியாகோ மின்சார கார் அதன் பெட்ரோல் காரை விட 30% தான் அதிகம். சில ஆண்டுகள் பெட்ரோல், டீசல் விலையில் இது ஈடுகட்டும் என்பதால், புதிதாக கார் வாங்குபவர்கள் டாடா டியாகோ பக்கம் வர வாய்ப்புகள் அதிகம்.
புதிய டார்கெட்
இது தொடர்பாக டாடா மொட்டராஸின் ஷைலேஷ் சந்திரா கூறுகையில், "குறைந்த விலைக்காக இந்த காரை நாங்கள் உருவாக்கவில்லை. இந்த விலையில் விற்கும் போது, பல சிறு நகரங்களில் கார் விற்பனையாக வாய்ப்புகள் உள்ளன. அதுவே எங்கள் இலக்கு" என்றார். இப்போது டாடா இதைத் தொடங்கி வைத்துள்ள நிலையில், மற்ற நிறுவனங்களும் மின்சார கார் பக்கம் திரும்பி உள்ளன. இருப்பினும், அவை புதிய கார்களை வெளியிடுவதற்குள் டாடா மின்சார கார் சந்தையில் கணிசமான இடத்தை பெற்று இருக்கும்.
புதிய மாடல்கள்
டாடா இத்துடன் நிற்க போவது இல்லை. இப்போது டாடாவிடம் 3 மின்சார கார் மாடல்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்த 4 ஆண்டுகளில் பல வகை மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் டாடா திட்டமிட்டு உள்ளது. அரசு மின்சார கார்களுக்கு சலுகை அளிப்பதாலும், மற்ற நிறுவனங்கள் களத்தில் குதிக்கும் என்பதாலும் மின்சார வாகனங்களின் விலை மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார கார் சந்தை
மின்சார கார்களுக்கு தேவையான பாகங்களில் பெரும்பாலானவற்றை டாடா முதலில் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து வந்தது. ஆனால் இப்போது 50% பொருட்களை உள்நாட்டில் இருந்தே பெறுகிறது. மேலும், பேட்டரி, சிப்களை சொந்தமாக உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளது. இதனால் விலை மேலும் குறையும். இப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் பெட்ரோல் கார் சந்தையில் விட்ட சந்தையை டாடா மின்சார சந்தையில் பிடிக்க முயல்கிறது.