Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாட்ஸ்அப் - டெலிகிராம் குரூப்பில் இருக்கீங்களா? இதை நம்பினால் பணம் உங்களுக்கு இல்லை - மக்களே உஷார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டில் நாளுக்கு நாள் டிஜிட்டல் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வாட்ஸ்அப் (WhatsApp), டெலிகிராம் (Telegram) மற்றும் போலி வர்த்தக செயலிகள் மூலம் சைபர் குற்றவாளிகள் அப்பாவி மக்களை குறிவைத்து பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில் ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மருத்துவர்கள், கார்ப்பரேட் நிர்வாகிகள், நிதி வல்லுநர்கள் என பல படித்தவர்கள்கூட கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மோசடிகள் மிகவும் திட்டமிட்டு, நவீன தொழில்நுட்பத்துடன் செயல்படுவதால், படித்தவர்கள்கூட எளிதில் ஏமாந்துவிடுகிறார்கள். போலி செபி (SEBI) பதிவு எண்கள், போலியான பயனர்களின் சான்றுகள், முதலில் கிடைக்கும் லாபம் மற்றும் 'விரைவில் பணம் சம்பாதிக்கலாம்' என்ற ஆசை ஆகியவற்றை நம்பி மக்கள் பணத்தை பறிகொடுக்கின்றனர்.

இந்த மோசடிகளைத் தடுக்க, அரசு தேசிய இணையக் குற்றப் புகார் போர்ட்டல் (National Cybercrime Reporting Portal - 1930 உதவி எண்), ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் செபி (SEBI) ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தாங்கள் செய்யும் முதலீடுகளைச் சரிபார்த்து, மோசடிகளை உடனடியாகப் புகாரளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசு இதற்காகப் பலவிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நவீன முதலீட்டு மோசடிகள், போலி நிதி நிறுவனங்கள் போலவே செயல்படுகின்றன.

அறியாத நபர்களை வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழுக்களில் சேர்ப்பதன் மூலம் இந்த மோசடி தொடங்குகிறது. இந்தக் குழுக்கள், பங்குச் சந்தை தொடர்பான நிபுணர்கள் கலந்துரையாடும் குழுக்கள் போல இருக்கும்.இதில் உள்ள போலி உறுப்பினர்கள், தாங்கள் 'பெரிய லாபம்' ஈட்டியதாக ஸ்கிரீன்ஷாட்களைப் பகிர்ந்து, அக்குழுவின் நிர்வாகிகளைப் பாராட்டுகின்றனர்.

அதன்பின், 'நிபுணர்' அல்லது 'செபி பதிவு பெற்ற ஆலோசகர்' என்று கூறிக்கொண்டு, பங்குச் சந்தை ஆலோசனைகள், பிட்காயின் (Bitcoin) வர்த்தகம் அல்லது ஐபிஓ (IPO) குறிப்புகளைப் பகிர்வார்கள். பாதிக்கப்பட்டவர்கள் ஒரு செயலி (App) அல்லது இணையதளத்தில் சிறிய முதலீடுகளைச் செய்யும்படி தூண்டப்படுவார்கள்.

முதலில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, மற்ற பாதிக்கப்பட்டவர்களின் பணத்தைப் பயன்படுத்தி சில சிறிய லாபத் தொகையைத் திருப்பி அனுப்புவார்கள். இது ஒரு போன்ஸி திட்டத்தை போன்ற மோசடி செயலாகும். ஒருமுறை நம்பிக்கை கிடைத்ததும், மோசடி செய்பவர்கள் கட்டுப்படுத்தும் போலியான வர்த்தக செயலியில் அதிக தொகையை முதலீடு செய்யும்படி கூறுவார்கள்.

அந்த செயலியின் டாஷ்போர்டில் லாபம் காட்டப்பட்டாலும், பணத்தை எடுக்க முயற்சிக்கும்போது வரிகள், செயலாக்கக் கட்டணங்கள், ஜிஎஸ்டி, கணக்கு மேம்படுத்தல்கள் எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதனால், தங்கள் கணக்கிலுள்ள பணம் முழுவதையும் இழக்கும் வரை பணத்தை அனுப்பும்படி பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

இந்த மோசடிகள் எவ்வளவு மோசமானவை என்பதை சமீபத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் காட்டுகின்றன. விசாகப்பட்டினத்தில், ஒரு மருத்துவர் வாட்ஸ்அப் பங்குச் சந்தை குழுவில் சேர்க்கப்பட்டு ₹2.5 கோடி இழந்தார். அதேபோல், ஹைதராபாத்தில் மற்றொரு மருத்துவர், இரண்டு மாதங்களில் 46 ஆன்லைன் பரிமாற்றங்கள் மூலம் ₹4.7 கோடி இழந்துள்ளார்.

நவி மும்பையில், செபி ஆலோசகர் என்று கூறிய நபரிடம் எச்ஆர் ஒருவர் ₹36.74 லட்சத்தை இழந்தார். தானேவில், ஒரு NBFC ஊழியர் போலியான கிரிப்டோ மற்றும் வர்த்தக தளங்கள் மூலம் ₹79 லட்சத்தை இழந்தார். குர்லாவில், 33 வயது தகவல் தொழில்நுட்ப வல்லுநர், டெலிகிராம் வழியாக வந்த பிட்காயின் திட்டத்தில் சுமார் ₹7 லட்சத்தை இழந்தார்.

ஒடிசாவின் கட்டாக்கில், போலியான நிறுவனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றிய டெலிகிராம் அடிப்படையிலான மோசடியை போலீசார் சமீபத்தில் கண்டுபிடித்தனர். இதில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு ₹90 லட்சத்திற்கும் மேல் பணம் முடக்கப்பட்டது. இது சட்ட அமலாக்கத்தின் தீவிர நடவடிக்கையைக் காட்டுகிறது.

மத்திய அரசு டிஜிட்டல் மோசடிகளுக்கு எதிராக வலுவான பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேசிய இணையக் குற்றப் புகார் போர்ட்டல் (cybercrime.gov.in) மற்றும் 24x7 இணையக் குற்ற உதவி எண் 1930 மூலம் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம்.

உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) இந்த மோசடி வலைப்பின்னல்களைக் கண்காணித்து வருகிறது. புகார் பதிவு செய்யப்பட்டவுடன், பணம் எடுக்கப்படுவதற்கு முன்பே வங்கிகள் மற்றும் டிஜிட்டல் வாலெட்டுகளுக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கணக்குகள் முடக்கப்படுகின்றன.

ரிசர்வ் வங்கி, செபி, வங்கிகள், கட்டண நுழைவாயில்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான கணக்குகள் மற்றும் சிம் கார்டுகள் முடக்கப்படுகின்றன. அசாதாரண பணப் பரிமாற்றங்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன.

மாநில காவல்துறையினருக்கு தற்போது இணையக் குற்றங்கள் தொடர்பான ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் மோசடிகளை விரைந்து கையாளும் வகையில், முக்கிய நகரங்களில் சிறப்பு இணையக் காவல் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இது குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உதவும்.

அரசு குடிமக்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது: வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் முதலீட்டுக் குழுக்களை நம்ப வேண்டாம். அறியாதவர்கள் அனுப்பும் வர்த்தக இணைப்புகளை கிளிக் செய்யக் கூடாது. "முதலீடுகளுக்காக" தனிப்பட்ட யுபிஐ (UPI) ஐடிகளுக்குப் பணத்தை ஒருபோதும் அனுப்பக் கூடாது.

அதிகாரப்பூர்வ செபி வலைத்தளத்தில் பதிவைச் சரிபார்த்து உறுதிப்படுத்தவும். நன்கு அறியப்பட்ட, ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெற்ற வர்த்தக தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மோசடிகளை உடனடியாக 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிப்பது அவசியம். விழிப்புணர்வுடன் இருப்பதும், சரியான நேரத்தில் புகார் அளிப்பதும் உங்களின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+