கைவிட்ட டிரம்ப்.. சீனாவுடன் வர்த்தகம் செய்வதில் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்.. ஷாக்கான 5 மேட்டர்
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட உள்ளது. டிரம்பின் வரியால் அமெரிக்காவுக்கு மாற்றாக நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. ஆனால் உண்மையில் அமெரிக்காவை விட்டுவிட்டு சீனாவுடன் இந்தியா வர்த்தகம் செய்வது அவ்வளவு எளிது இல்லை. 5 முக்கிய சவால்கள் உள்ளது தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். இதனால் நம் நாட்டுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகம் பெரிய அளவில் சரிவை சந்திக்க உள்ளது. நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது 50 சதவீதம் கூடுதல் வரியை செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனால் அமெரிக்காவில் நம் நாட்டின் பொருட்களின் விலை உயரும். இதனால் நம் நாட்டின் பொருட்களுக்கு பதில் பிற நாடுகளின் பொருட்களை அமெரிக்கர்கள் வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் நம் நாட்டின் தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும். அமெரிக்காவின் இந்த அடாவடி வரியால் நம் நாடு பகையை மறந்து சீனாவுடன் கைகோர்க்க உள்ளது.
சீனா செல்லும் மோடி
பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 2 நாள் பயணமாக சீனா செல்கிறார். சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட 30 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடியும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். அப்போது சீனா - இந்தியா இடையேயான வர்த்தகம் உள்பட பல்வேறு அம்சங்கள் பற்றி அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்குடன் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவுடன் கைகோர்க்கும் இந்தியா
அமெரிக்காவால் ஏற்படும் வருவாய் இழப்பை சீனாவை வைத்து சரிசெய்யும் வகையில் இந்த விவாதம் அமையலாம். இந்நிலையில் தான் அமெரிக்காவை ஒப்பிடும்போது சீனாவுடன் இந்தியா வர்த்தகம் செய்வதில் பல்வேறு சவால்கள் உருவாகும். சீனாவுடன் வர்த்தகம் செய்யும்போது இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விவரங்கள் வருமாறு:
முதல் சவால்
அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் நம் நாடு 40 பில்லியன் அமெரிக்க டாலர் வரை கூடுதலாக வர்த்தகம் செய்தது. அதாவது அமெரிக்காவில் இருந்து நாம் இறக்குமதி செய்வதை விட நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகப்படியான பொருட்கள் ஏற்றுமதியானது. ஆனால் சீனாவை எடுத்து கொண்டால் அந்த நாடு தான் நம்மிடம் அதிகம் வர்த்தகம் செய்கிறது.
நம் நாட்டை ஒப்பிடும்போது சீனா நம்மிடம் 100 பில்லியன் அமெரிக்க டாலரை விட கூடுதலாக வர்த்தகம் செய்கிறது. சீனாவுடன் உறவு சீராகும்போது அதன் வர்த்தகம் நம் நாட்டில் இன்னும் கூட அதிகரிக்கலாம். இது நம் நாட்டுக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது.
2வது சவால்
அமெரிக்காவும், சீனாவும் வல்லரசு நாடுகளாக உள்ளன. இதில் அமெரிக்காவை ஒப்பிடும்போது சீனா உற்பத்தி துறையில் பெரும் வல்லரசாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் ஒப்பிட முடியாத அளவுக்கு உற்பத்தி திறனை சீனா மேம்படுத்தி உள்ளது. இதனால் உலகளவிலான ஏற்றுமதியில் சீனா முன்னணியில் உள்ளது. இது நம் நாட்டுக்கு பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.
2019-20ம் ஆண்டு முதல் இந்தியாவின் உற்பத்தி ஆண்டுக்கு 4 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வளர்ந்துள்ளது. விவசாய உற்பத்தி 4.7 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. ஆனால் சீனாவை எடுத்து கொண்டால் உற்பத்தி திறனின் பல மடங்கு முன்னணியில் உள்ளது. இதனால் சீனாவின் தொழில் துறையை எதிர்கொள்வது நம் நாட்டுக்கு சிரமத்தை எதிர்கொள்ளும்.
3வது சவால்
அமெரிக்காவை பொறுத்தவரை சீனா தான் முதல் எதிரி. இதனால் சீனா மீது எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கலாம். அதேபோல் தனது நட்பு நாடுகளையும் சீனா மீது பொருளாதார தடைகளை விதிக்க உத்தரவிடலாம்.
அதுமட்டுமின்றி சீனாவுடன் உறவு கொண்டாடும் நாடுகள் மீதும் பொருளாதார தடைகளை டிரம்ப் விதிக்கலாம். இது நடக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு எதிராக பல தடைகள் வரலாம். இது நம் நாட்டுக்கு கூடுதல் பிரச்சனையாகலாம்.
4வது சவால்
சீனா ஏற்கனவே பணவாட்டத்தை (Deflation) எதிர்த்துப் போராடி வருகிறது. பணவாட்டம் என்பது பணவீக்கத்துக்கு எதிரானது. இரண்டுமே பொருளாதார சிக்கலை தான் குறிக்கும். ஒரு நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும்போது பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். மாறாக பணவாட்டம் ஏற்பட்டதால் பொருட்களின் விலை சரியும்.
இப்படியான சூழலில் நம் நாட்டில் இருந்து சீனாவுக்கு பொருட்கள் செல்லும்போது அதன் விலை குறைவாக தான் இருக்கும். இதனால் அதிகப்படியான லாபம் கிடைக்காது. அதேவேளையில் சீனா நம் நாட்டை சந்தையாக பயன்படுத்தி அதிகப்படியான லாபத்தை பெறலாம். இது உள்நாட்டிலும் நம் நாட்டின் உற்பத்தி சார்ந்த தொழில்களை பாதிக்க கூடும்.
5வது சவால்
கடந்த 30 முதல் 40 ஆண்டுகளை எடுத்து கொண்டால் இந்தியா - சீனா பொருளாதாரங்கள் வெவ்வேறு வழிகளில் பயணித்து வருகின்றன. தங்கள் நாடுகளின் பொருளாதாரத்தை சிறப்பாக வைக்க இருநாடுகளும் வெவ்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றன. சந்தை பொருளாதாரத்தில் இந்தியா தனியார் முதலீட்டை கொண்டு வர துடிக்கிறது.
ஆனால் சீனா அதனை எப்போது முடிவுக்கு கொண்டு வருவது என்று காத்திருக்கிறது. அதுமட்டுமின்றி நமது பரம எதிரியான பாகிஸ்தானின் நட்பு நாடாக சீனா உள்ளது. பாகிஸ்தானுக்கான ராணுவ தளவாடங்களை சீனா தான் வழங்கி வருகிறது. இதனால் புவிசார்ந்த அரசியல் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா - சீனா இடையேயான உறவில் எப்போது வேண்டுமானாலும் குழப்பம் வரலாம்.
கடினமான காரியம்
இருப்பினும் நம் நாட்டை எடுத்து கொண்டால் தனியார் துறையை வளர்த்து உலகம் முழுவதும் வர்த்தகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற உறுதியில் உள்ளது. இதனால் இந்தியா - சீனா இடையேயான உறவை சிறப்பாக உருவாக்கலாம் என்று சொல்வது எளிது. ஆனால் அதனை முன்னெடுத்து செல்வது ரொம்ப கடினமான காரியமாகும் என்கின்றனர் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications