பூங்காவிற்கு சுற்றுலா வந்த புதுமண தம்பதி.. நெஞ்சை பிடித்து விழுந்த கணவன்.. மனைவியும் விபரீத முடிவு
டெல்லி: டெல்லி அருகே காசியாபாத்தில் திருமணமான 3 மாதத்தில் மாரடைப்பால் கணவர் உயிரிழந்த நிலையில், துக்கம் தாங்காமல் மாடியில் இருந்து குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் டெல்லியின் புறநகர் பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
டெல்லியின் புறநகர் பகுதியான காசியாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுதியாகும். இங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் அபிஷேக் அலுவாலியா (வயது 25). இவருக்கு 22 வயதாகும் அஞ்சலி என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி கல்யாணம் நடந்தது. புதுமண தம்பதி இருவரும் காசியாபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 7-வது மாடியில் வசித்து வந்தார்கள்.

திருமணம் ஆனது முதல் புதுமண ஜோடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.தங்களுக்கு பிடித்த பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக பயணித்து வந்தனர். இவர்கள் வாழ்வில் இடியாக ஒரு சம்பவம் நடந்தது. நேற்று முன்தினம் அபிஷேக் அஞ்சலி தம்பதி இருவரும், டெல்லியில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு சென்றுள்ளனர்.
அங்கு மிருகங்களை மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்து சுற்றி பார்த்தபடி மிருகக்காட்சி சாலையில் பொழுதை போக்கிக் கொண்டிருந்தனர். இதனிடையே திடீரென அபிஷேக் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, தரையில் சுருண்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அஞ்சலி கதறி அழுததுடன், அருகில் உள்ளவர்களிடம் உதவி கேட்டார்.
அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து, அபிஷேக்கை உடனடியாக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்துவிட்டு, அவர் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்..
இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், இரவில் அபிஷேக்கின் உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காலையில் சந்தோசமாக போனவர் மாலையில் பிணமாக வந்ததை தாங்க முடியாமல் அஞ்சலி கதறி அழுதார். கணவரின் உடலை பார்த்தபடி இருந்த அஞ்சலி, திடீரென்று வீட்டின் பால்கனி பகுதிக்கு ஓடினார். உறவினர்கள் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்குள், அவர்கள் கண் முன்பாகவே பால்கனியில் இருந்து குதித்தார்.
இதில் படுகாயம் அடைந்த அஞ்சலியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். பின்னர் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அஞ்சலி நேற்று உயிரிழந்தார். திருமணம் முடிந்து 3 மாதங்கள்கூட வாழாத தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் காசியாபாத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications