நான் இந்திரா காந்தியின் பேத்தி.. உண்மையை மக்களிடம் சொல்வேன்... உ.பி. அரசுக்கு பிரியங்கா எச்சரிக்கை
டெல்லி: பொதுமக்களிடம் உண்மையை பேசவிடாமல் உத்தரப்பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு மிரட்டி வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் சிறுமிகள் காப்பகம் ஒன்றில் கொரோனா கோரதாண்டவமாடி இருக்கிறது. அங்கு 57 சிறுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் அதிதீவிரம்- 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா- 407 பேர் மரணம்
7 சிறுமிகள் கர்ப்பம்
அத்துடன் 7 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதும் மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் ஒருவருக்கு ஆட்கொல்லி நோயான எச்.ஐ.வி. இருப்பதும் உறுதியானது. ஆனால் சிறுமிகள் காப்பகத்துக்கு வரும்போதே கர்ப்பமாக இருந்தனர்; இதற்கு ஆதாரங்கள் உண்டு என்கிறது அரசு தரப்பு.
விமர்சித்த பிரியங்காவுக்கு நோட்டீஸ்
இச்சம்பவத்தை முன்வைத்து உத்தரப்பிரதேச ஆளும் பாஜக அரசை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இதனடிப்படையில் பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. பிரியங்கா காந்தி தமது பதிவை திருத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதனால் சிறுமிகள் விவகாரம் அரசியலாக விஸ்வரூபமெடுத்தது.
பிரியங்காவின் பதிலடி
இதற்கு தற்போது பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார். தமது சமூக வலைதள பக்கங்களில் அடுத்தடுத்து இந்தி மொழியில் பிரியங்கா காந்தி பதிவிட்டு வருகிறார். அதில், என்னை பல்வேறு துறைகள் மூலம் அச்சுறுத்தலாம் என நினைக்கிறது உத்தரப்பிரதேச அரசு. இப்படியெல்லாம் நீங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள்.
இந்திராவோட பேத்தி
நான் மக்களுக்கு சேவையாற்ற வந்திருக்கிறேன். மக்களிடம் உண்மையை சொல்ல வேண்டியது என் கடமை. நான் இந்திரா காந்தியின் பேத்தி. இந்த அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் பயப்படாமல் உண்மையைத்தான் சொல்வேன். சிலரைப் போல அறிவிக்கப்படாத பாஜக செய்தித் தொடர்பாளர் நான் அல்ல என காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார் பிரியங்கா.