ஏஆர் ரஹ்மானை போல் வெறுப்பை காட்டுபவர் யாரும் இல்லை.. நடிகை கங்கனா ரனாவத் கடும் அட்டாக்
டெல்லி: ‛‛ஏஆர் ரஹ்மானை போல் பாரபட்சம், வெறுப்பு காட்டும் ஒரு மனிதரை நான் சந்தித்தது இல்லை. நான் இயக்கிய 'எமர்ஜென்சி' படத்தின் கதையை அவரிடம் சொல்ல நான் மிகவும் விரும்பினேன். கதை சொல்வதை விடுங்கள்.. நீங்கள் என்னை சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள். எதிர்க்கட்சி தலைவர்கள்கூட, படத்தின் சமநிலையான மற்றும் இரக்கமுள்ள அணுகுமுறையைப் பாராட்டி எனக்குப் பாராட்டு கடிதங்களை அனுப்பினர், ஆனால் நீங்கள் உங்கள் வெறுப்பால் குருடாகி விட்டீர்கள்'' என்று கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் ஏஆர் ரஹ்மான். 2 ஆஸ்கர் விருதுகள் வாங்கி நம் நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் இண்டர்வியூ ஒன்று வழங்கினார்.

அதில் பாலிவுட் திரைப்படங்கள் பற்றியும், தற்போது பாலிவுட் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காதது பற்றியும் விளக்கினார். இதுதொடர்பாக ஏஆர் ரஹ்மான், ‛‛பாலிவுட் திரைத்துறையில் அதிகாரம் என்பது படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் உள்ளது. அவர்கள் தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். பாலிவுட்டில் மத ரீதியான பாகுபாடுகள் நிலவுததாக செவிவழி செய்தி வந்தது. ஆனால் என் காதுக்கு நேராக எதுவும் நடக்கவில்லை.
நான் சந்தோஷமாக இருக்கிறேன். என் குடும்பத்துடன் ஓய்வெடுக்க எனக்கு அதிக நேரம் கிடைக்கிறது. நான் வேலை தேடி அலைபவன் அல்ல. வேலை என்னைத் தேடி வர வேண்டும். என் நேர்மை எனக்கு வேலையை பெற்றுத் தரும். நான் எதற்குத் தகுதியானவனோ, அது எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.
இதில் மத ரீதியான பாகுபாடுகள் நிலவுவதாக ஏஆர் ரஹ்மான் கூறிய கருத்து தான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளார். அவருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக இன்னொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானை, நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‛‛டீயர் ஏஆர் ரஹ்மான் ஜி.. நான் @arrahman ஜி, நான் பாஜகவை ஆதரிப்பதால் திரையுலகில் பாரபட்சம் மற்றும் பாகுபாட்டை எதிர்கொள்கிறேன். ஆனாலும் உங்களை விட அதிக பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒரு மனிதரை நான்
சந்தித்ததில்லை என்று சொல்ல வேண்டும்.
நான் இயக்கிய 'எமர்ஜென்சி' படத்தின் கதையை உங்களிடம் சொல்ல நான் மிகவும் விரும்பினேன். கதை சொல்வதை விடுங்கள்.. நீங்கள் என்னை சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு Propaganda படத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. அதேவேளையில் 'எமர்ஜென்சி' படம் அனைத்து விமர்சகர்களாலும் ஒரு தலைசிறந்த படைப்பு என சொல்லப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர்கள்கூட, படத்தின் சமநிலையான மற்றும் இரக்கமுள்ள அணுகுமுறையைப் பாராட்டி எனக்குப் பாராட்டு கடிதங்களை அனுப்பினர், ஆனால் நீங்கள் உங்கள் வெறுப்பால் குருடாகி விட்டீர்கள். உங்களுக்காக நான் வருந்துகிறேன்'' என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications