டிரம்பால் உலக பொருளாதாரமே பாதிக்கப்படலாம்.. புதிய வரி விதிப்பு பற்றி ரகுராம் ராஜன் தந்த வார்னிங்
டெல்லி: டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள வரி விதிப்பு என்பது பொருளாதாரத்தின் மீது நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதோட, மொத்த உலக பொருளாதாரத்தையும் பாதிக்கலாம் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவர் கனடா, சீனா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு அதிக வரி வசூலிப்பதாக அறிவித்துள்ளார். அதாவது ஒவ்வொரு நாடும், பிற நாடுகளிடம் இருந்து பொருட்களை இறக்குதி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளன.

இது குறிப்பிட்ட நாட்டுக்கு வணிகமும், இன்னொரு நாட்டுக்கு மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஒவ்வொரு நாடும் வரிகளை விதித்து வருகிறது. ஒவ்வொரு நாடு மற்றும் அந்த நாடுகள் வழங்கும் பொருட்களை பொறுத்து வரி விகிதங்கள் என்று மாறுபாடு இருக்கும்.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் கிடைக்கும் வரி வருவாயை பயன்படுத்தி நாட்டின் கஜானாவை நிரப்ப உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் பிற நாடுகளுக்கு அதிக வரி விதிக்க முடிவு செய்திருப்பது பற்றி பொருளாதார நிபுணரும், நம் நாட்டின் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளர். இதுதொடர்பாக ரகுராம் ராஜன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
‛‛டொனால்ட் டிரம்பின் வரி அதிகரிப்பு தொடர்பான கருத்து என்பது பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதற்கான ஆதாரமாக தான் இருக்கிறது. அதோடு உலகின் பல பகுதிகளுக்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். அமெரிக்கா நம்புவது போல் நான் இந்த விஷயத்தை பாசிட்டிவ்வாக பார்க்கவில்லை. அமெரிக்காவிற்கு வெளியே பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்ற ஒரு காரணத்துக்காக இத்தகைய செயல் செய்வது என்பது மலிவானதாக இருக்கும்.
வரி விதிப்பதன் மூலமாகவே அமெரிக்கா பலன் பெறும் என்று என்னால் சொல்ல முடியாது. குறிப்பாக அமெரிக்கா குறிப்பிட்ட நாடுகளுக்கு வரி விதிப்பதன் மூலம் செலவுகளை குறைக்க அங்குள்ள உற்பத்திகள் பிற நாடுகளுக்கு மாற்றப்படும். உதாரணமாக சீனாவுக்கு பதில் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லலாம். இது பல நாடுகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். அதுமட்டுமின்றி அமெரிக்காவின் வரி திட்டம் என்பது மொத்த உலக பொருளாதாரத்தையும் பாதிக்கலாம். அதேபோல் வெளிநாட்டு முதலீடுகளையும் பாதிக்கலாம்'' என்றார்.
டொனால்ட் டிரம்பின் இந்த வரி விதிப்பு முறையால் நம் நாடும் கூட பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் இதுதொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதாவது பிரிக்ஸ் நாடுகள் தங்களுடைய சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை குறைக்க நினைத்தால் அந்த நாடுகள் மீது 25 சதவீதம் மட்டுமில்லை 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார்.
இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியாவும் உள்ளது. இந்த கூட்டமைப்பில் இந்தியா தவிர பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. தற்போது சர்வதேச அளவிலான வர்ததகம் என்பது நாடுகள் இடையே அமெரிக்க டாலர் முறையில் தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் அமெரிக்க டாலருக்கு பதில் மாற்று கரன்சியை பயன்படுத்தவும், இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதை குறைக்கவும் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் பரவியது.
இதனால் கோபமான டிரம்ப் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கும் வார்னிங் செய்தார். அதோடு இந்த கூட்டமைப்பில் உள்ள ரஷ்யா, சீனா உள்ளிட்டவை அமெரிக்காவுக்கு மாற்றாக தங்களை நினைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த நாடுகள் அமெரிக்காவை போல் வல்லரசு நாடுகளான உள்ளன. இதனால் ரஷ்யா, சீனா, இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரின் மதிப்பை குறைத்து விடலாம் என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications