"காதலியுடன் இருக்க வேண்டும்".. இ-மெயிலில் லீவு கேட்ட ஊழியர்.. மேனேஜர் தந்த சர்ப்ரைஸ்.. குவியும் பாராட்டு
டெல்லி: ‛‛என் காதலி டிசம்பர் 17 ம் தேதி சொந்த ஊருக்கு செல்கிறாள். இதனால் அவளுடன் சேர்ந்து நேரம் செலவழிக்க வேண்டும்'' எனக்கூறி தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மேனேஜரிடம் விடுமுறை கேட்ட சம்பவமும், அதன்பிறகு மேனேஜர் செய்த செயலும் தற்போது இணையதளங்களில் விவாதமாகி வருகிறது.
அலுவலகத்தில் வாரந்தோறும் கிடைக்கும் விடுமுறைக்கு அப்பாற்பட்டு நமக்கு வேறு சில நாட்களிலும் லீவு தேவையானதாக உள்ளது. ஏதேனும் சுபநிகழ்ச்சி, உடல்நல பிரச்சனை, துக்க நிகழ்ச்சி, கோவில் திருவிழா, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக விடுமுறை தேவைப்படும்.

இதனை கூறி விடுமுறை கேட்டால் சில நிறுவனங்கள் மறுகேள்வி கேட்காமல் விடுமுறை கொடுத்துவிடும். ஆனால் சில நிறுவனங்களில் விடுமுறை என்பது கிடைக்காத நிலை உள்ளது.
இதனால் பலரும் பொய் சொல்லி விடுமுறை எடுப்பது உண்டு. குறிப்பாக உடல்நலம் சரியில்லை அல்லது உறவினர் யாராவது தவறிவிட்டார்கள் என்று தான் அடிக்கடி கூறி விடுமுறை எடுப்பது உண்டு. ஆனால் இங்கே ஒருவர் தனது தோழியுடன் நேரம் செலவிட வேண்டும். இதனால் விடுமுறை வேண்டும் என்று மேனேஜரிடம் கேட்டு அனுமதி பெற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.
டெல்லியில் STIM Oral Care என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளைஞர் நேற்று விடுமுறை எடுத்தார். அதற்கு முன்பாக அவர் தனது மேனேஜருக்கு விடுமுறை கோரி இ-மெயில் அனுப்பினார். அதில், ‛‛நான் டிசம்பர் 16ம் தேதி விடுமுறை எடுக்க விரும்புகிறேன். எனது ‛கேர்ள்பிரண்ட்' (காதலி) டிசம்பர் 17 ம் தேதி உத்தரகாண்டில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு செல்ல உள்ளார். அதன்பிறகு ஜனவரி மாதம் தொடக்கம் வரை திரும்ப வரமாட்டார். இதனால் அவர் புறப்படுவதற்கு முன்பாக அவளுடன் நேரம் செலவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இதை பார்த்த அவரது மேனேஜர் விடுமுறை வழங்கினார். அதன்படி அந்த ஊழியர் நேற்று விடுமுறை எடுத்தார். இந்நிலையில் தான் தனியார் நிறுவன மேனேஜர் அந்த இ-மெயிலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்தார்.
அதில், ‛‛சமீபத்தில் என் இன்பாக்ஸிற்கு வந்த இமெயில் இது. 10 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்திருந்தால் இது திடீர் உடல்நலக்குறைவு என்று காலை 9.15 மணிக்கு தான் வந்திருக்கும். ஆனால், இப்போது காலம் மாறுகிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் இந்த முறையையே விரும்புகிறேன். காதலுக்கு ‛நோ' என்று சொல்ல முடியுமா? விடுமுறை அனுமதிக்கப்பட்டது" என கூறி அந்த ஊழியரின் நேர்மையை பாராட்டினார்.
இந்த பதிவு தற்போது வைரலாக தொடங்கி உள்ளது. அதோடு பணியிடங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் விடுப்பு சார்ந்த விவாதத்தை தூண்டி உள்ளது. பலரும் அந்த ஊழியரின் நேர்மையையும், விடுமுறை வழங்கிய மேனேஜரையும் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினரோ, ‛‛தனிப்பட்ட விடுப்புக்குக் காரணம் சொல்வது அவசியமா?.தனிப்பட்ட காரணங்களுக்கான விடுமுறை எடுப்பதை இப்படி நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை'' என்று கூறி வருகின்றனர்.
அதேபோல் இன்னொருவரோ, ‛‛உண்மையான காரணத்துடன் விடுமுறை கேட்டுள்ளார். அன்பு மற்றும் அக்கறை செலுத்தும் ஒருவருக்காக இன்னொருவர் விடுப்பு கேட்கும்போது அதற்கு ஆம் என்று சொல்லலாம்'' என பாராட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications