"குழந்தைகளை பிடிக்கும்" திருமணம் எப்போது? இத்தாலி நாளிதழில் ராகுல் ஓபன் டாக்.. மோடி பற்றியும் பேச்சு
எனக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும். ஆனால் 52 வயதாகியும் நான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என்பதை எனக்கே புரிந்து கொள்ள முடியவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி: எனக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும். ஆனால் 52 வயதாகியும் நான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என்பதை எனக்கே புரிந்து கொள்ள முடியவில்லை என்று இத்தாலி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தவிர அரசியல், குடும்ப விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி மனம் திறந்து பேட்டி அளித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இத்தாலி நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
தனது பேட்டியில் அரசியல் மட்டும் இன்றி தனது தனிப்பட்ட விருப்பம், குடும்ப விஷயங்கள் குறித்தும் ராகுல் காந்தி மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். ராகுல் காந்தியிடம் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
தனிநாடு கேட்ட மயில்சாமி.. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாஜகவை எதிர்த்தவர்! திருமுருகன் காந்தி ரீவைண்ட்
குழந்தைகளை எனக்கு பிடிக்கும்
திருமணம் செய்துகொள்ளாததற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "இது சற்று வினோதமாகத்தான் உள்ளது... ஆனால் எனக்கு தெரியவில்லை. நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. குழந்தைகளை எனக்கு பிடிக்கும்" என்றார். அதேபோல் பாரத் ஜோடோ யாத்திரை குறித்த தனது அனுபவம் பற்றியும் ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டார். ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து இன்னமும் தனது தாடியை ஷேவ் செய்யாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
100 சதவீதம் மோடியை வீழ்த்த முடியும்
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் தாடியை ஷேவ் செய்யக் கூடாது என்று நான் முடிவு செய்தேன். தற்போது இதை (தாடியை) வைத்துக்கொள்ளலாமா.. வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்" என்றார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, "பிரதமர் மோடி நிச்சயம் தோற்பார் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவரை வீழ்த்த முடியும் என்று உறுதியாக சொல்கிறேன். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 100 சதவீதம் பிரதமர் மோடியை வீழ்த்த முடியும். பாசிசத்தை தோற்கடிக்க ஒரு மாற்று உருவாக வேண்டும்.
எனது சகோதரி பிரியங்கா காந்திக்கு
உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தை பொறுத்தவரை நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. அது வெளியுறவுக்கொள்கை சார்ந்தது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் அமைதி வழியில் தீர்வு காண்பது அவசியமானது. சீனாவால் மேற்கத்திய நாடுகளால் தொழில்துறையில் போட்டியிட இயலாது. ஆனால், இந்தியாவால் அது முடியும்" என்றார். தனது குடும்ப விஷயம் குறித்தும் பேசிய ராகுல் காந்தி, எனக்கு எனது இந்திய பாட்டியை (இந்திரா காந்தி) பிடிக்கும். எனது சகோதரி பிரியங்கா காந்திக்கு இத்தாலி பாட்டியை பிடிக்கும்.. இத்தாலி பாட்டி 98-வயது வரை இருந்தார். அவருடன் மிகவும் பாசத்துடன் இருந்தேன்.
பாட்டிதான் உதவிகரமாக இருப்பார்
என் கொள்ளு தாத்தா நேருவை நான் பார்த்தது இல்லை. இந்திரா காந்தியுடன் எனக்கு நிறைய பசுமையான நினைவுகள் உண்டு. சின்ன வயசில் எனக்கு கீரை, பச்சை பட்டாணி பிடிக்காது. ஆனால், தந்தை சாப்பிட கட்டாயப்படுத்துவார். அந்த நேரத்தில் எனது பாட்டிதான் எனக்கு உதவிகரமாக இருப்பார். எனது பாட்டி ஒரு செய்திதாளை விரித்து இதை பார் என்பார். அந்த சமயத்தில் நான் என் தட்டில் இருப்பதை அவர் தட்டுக்கு மாற்றி வைத்து விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.