தப்பு செய்தால் தூக்குல போடுங்க.. லோக்சபாவில் அட்டகாசம் செய்த நபரின் அப்பா ஆவேச பேட்டி
டெல்லி: என் மகன் தவறு செய்திருந்தால், அவரை தூக்கில் போடுங்கள் என நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தவரின் தந்தை ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று பிற்பகலில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்த இருவர் வண்ணப்புகைக் குப்பிகளை வீசியுள்ளனர். சர்வாதிகாரம் கூடாது என்று முழக்கமிட்டவாறே அவைத் தலைவர் இருக்கையை நோக்கி விரைந்துள்ளனர்.

அவர்களின் அத்துமீறலால் அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எம்பிக்கள்தான் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அதற்குள் அவை காவலர்கள் விரைந்து வந்து அவர்களை வெளியேற்றிவிட்டனர்.
நாடாளுமன்றத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்துக்குள் வண்ணப்புகைக் குப்பிகளுடன் நுழைய முடியும் போது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றுடன் ஏன் நுழைய முடியாது? என பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மனோரஞ்சன், சாகர் சர்மா, நீலம், அமோல் ஷிண்டே ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் பெண். இந்த நிலையில் இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நாடாளுமன்ற பாஸ் மைசூர் எம்பி பிரதாப் சிம்ஹா வழங்கியது தெரியவந்தது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மனோரஞ்சன், சாகர் சர்மா ஆகியோர் கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதுகுறித்து மனோரஞ்சனின் தந்தை தேவராஜேகவுடா கூறுகையில் லோக்சபாவுக்கான பாஸ் என் மகனுக்கு எப்படி கிடைத்தது என தெரியவில்லை. ஆனால் அவன் பெங்களூருக்கும் டெல்லிக்கும் அடிக்கடி சென்று கொண்டிருந்தான்.
Ruling & Opposition Party MP's Unitedly Bashed the Intruder.. 🔥😅#ParliamentAttack pic.twitter.com/8IlVETcqzz
— ᎠeeթtᎥ 🇮🇳 (@SaffronJivi) December 13, 2023
அவனிடம் 100 க்கும் மேலான சுவாமி விவேகானந்தா புத்தகங்கள் உள்ளன. அவன் என்ன செய்திருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. அவன் தவறு செய்திருந்தால் தூக்கிலிட வேண்டும் என தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். மனோரஞ்சன், தேவராஜேகவுடாவின் ஒரே மகனாவார். மைசூரிலிருந்து புறப்படுவதற்கு முன் தனது பெற்றோரிடம் பெங்களூர் செல்வதாகவே மனோரஞ்சன் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் டெல்லிக்கு போனது குறித்து பெற்றோருக்கு தெரியவில்லை.












Click it and Unblock the Notifications