மோடி கைதானாலும் பதவி பறிப்பு தான்.. மசோதா நிறைவேறும்.. அமித்ஷா கறார்
டெல்லி: பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்களின் பதவியை நீக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி கைது செய்யப்பட்டாலும் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறியுள்ளார்.
மத்தியில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்தது. பாஜக தேர்தல்களில் நேரடியாக வெற்றி பெற முடியாத மாநிலங்களில், ஆட்சியை கவிழ்த்தும், அந்த கட்சிகளில் குளறுபடி செய்வதாகவும் புகார் உள்ளது. வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்பினரை பாஜக தவறாக பயன்படுத்துவதாக புகார் உள்ளது.

பதவி பறிப்பு மசோதா
2024 தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளனர். ஆனாலும் பாஜக எதிர்க்கட்சிகளை வலுவிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்றது. அப்போது பல்வேறு மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன.
முக்கியமாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா மற்றும் பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவியை இழக்கும் வகையில் திருத்தம் செய்து தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ஏற்கனவே பாஜக ஆட்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் பல மாநிலங்களின் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் திமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சுமார் ஒன்றரை வருடம் சிறையில் இருந்தார். இதனால் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக இப்படி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். அரசியலமைப்பு திருத்தம் 130இன் படி, 5 வருடங்களுக்கு மேல் தண்டனை விதிப்பது கடுமையான குற்றமாக கருதப்படும். இதுபோன்ற குற்றங்களில் கைது செய்யப்படுவோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மோடியாக இருந்தாலும்
இது மக்கள் பிரதிநிதிகளின் ஒழுக்கநெறிகளை வலுப்படுத்தும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளில் நீதி நெறிக்கு ஆதரவளிப்பவர்கள் அதிகளவு உள்ளனர். சிறை சென்று வந்த பிறகும் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பதவியில் தொடர்கிறார்கள். டெல்லி முதலமைச்சர், தமிழ்நாடு அமைச்சர்கள் சிலர் கூட கைது செய்யப்பட்டபோது தங்களின் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
இந்த மசோதா நிறைவேறவில்லை என்றால் நாடாளுமன்ற கூட்டக் குழுவுக்கு அனுப்புவோம். பிரதமர், முதல்வர் அல்லது எந்த தலைவரும் சிறையில் இருக்கும்போது எப்படி நாட்டை நிர்வகிக்க முடியும். பிரதமர் நரேந்திர மோடி தனக்கு எதிராகவே இந்த அரசியல் சாசன திருத்தத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் பிரதமர் பதவியை கொண்டு வரவேண்டும் என்று சொல்லியதே மோடி தான். அவர் சிறை சென்றாலும் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார்." என்றார்.












Click it and Unblock the Notifications