டிரம்பின் கணக்கையே முடக்குகிறார்கள்... இவர்கள் ஆபத்தானவர்கள்... ட்விட்டரை தாக்கும் தேஜஸ்வி சூர்யா
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்வீட்டர் பக்கத்தை அந்நிறுவனம் நிரந்தரமாக முடக்கியிருப்பது பெரிய டெக் நிறுவனங்களின் அச்சுறுத்தல் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்று பாஜகவின் தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடனை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்றது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு காவலர், ஒரு பெண் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று டிரம்ப் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ட்விட்டர் பக்கம் முடக்கம்
டெனால்ட் டிரம்பின் டிவிட்டர் பக்கமான @realDonaldTrump முதலில் ஒரு சில மணி நேரம் மட்டும் முடக்கப்பட்டது. இதையடுத்து டிரம்பின் ட்வீட்கள் ட்விட்டரிலும் வெளியுலகிலும் வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளதால் டிரம்பின் ட்விட்டர் பக்கத்தை நிரந்தரமாக முடக்குவதாக அந்நிறுவனம் அறிவித்தது. டிரம்ப் பெரும்பாலும் ட்விட்டர் மூலமே அவரது ஆதரவாளர்களுடன் உரையாடலில் ஈடுபடுவார். இந்நிலையில் டிரம்பின் ட்வீட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தேஜஸ்வி சூர்யா கண்டனம்
இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதற்கு தெற்கு பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அது குறித்து தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டரில், "கட்டுப்பாடற்ற பெரிய டெக் நிறுவனங்களால் நமது ஜனநாயகங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து இன்னும் புரிந்து கொள்ளாதவர்களுக்கான இது ஒரு முக்கிய அழைப்பு. அமெரிக்க அதிபரிடமே இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்றால் மற்றவர்கள் குறித்துச் சொல்லவா வேண்டும். விரைவில் இந்தியாவும் டெக் நிறுவனங்களின் விதிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும். இதுவே நமது ஜனநாயகத்திற்குச் சிறந்தது" என்று பதிவிட்டுள்ளார்.

தேஜஸ்வியின் பேச்சு
பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா இது முன்னர் பல வெறுக்கத்தக்கப் பேச்சுக்களைப் பேசியுள்ளார். ஹைதராபாத் நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது, "ஒவைசி ஜின்னாவின் புதிய அவதாரம். அவரை நாம் தோற்கடிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். மஜ்லிஸ் கட்சித் தலைவரைப் பாகிஸ்தானைத் தோற்றுவித்தவருடன் ஒப்பிட்டு அவர் பேசியதற்கு ஹைதராபாத் போலீசார் அவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நகை முரண்
இது குறித்து பாஜகவின் சமூக ஊடக பிரிவு தலைவர் அமித் மால்வியா, "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் பக்கமே நீக்கப்பட்டுள்ளது ஆபத்தான முன்னுதாரணம் ஆகும். வேறுபட்ட கருத்துகளை உடையவர்களின் கருத்துகள் சகிப்புத்தன்மையுடன் அணுகப்பட வேண்டியது அவசியம். இதில் முரண் என்றால் பேச்சு சுதந்திரத்தை ஆதரிப்பவர்களே டிரம்பின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்குக் கொண்டாடுகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார். டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து நவம்பர் 28 ஆம் தேதி இவர் பதிவிட்ட ட்வீட், போலி செய்திகளைக் கொண்டுள்ளது என்று ட்விட்டர் எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications