பக்கத்துல ஆள் வந்தால் சத்தம் போடும் கருவி.. விலையும் கம்மிதான்.. சமூக இடைவெளி கேரண்டி.. அசத்திய ஐஐடி
டெல்லி: ஐ.ஐ.டி-காரக்பூரின் ஆராய்ச்சியாளர்கள் குழு பொது இடங்களில் சமூக தூரத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவின் (IA) அடிப்படையிலான கருவியை உருவாக்கி அசத்தியுள்ளது.
பேராசிரியர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி மற்றும் பேராசிரியர் ஆதித்யா பந்தோபாத்யாய் ஆகியோரின் தலைமையில் இந்த குழு தனிநபர்களுக்கிடையிலான இடைவெளியைக் கண்டறியக்கூடிய சாதனத்தை வடிவமைத்துள்ளது, இது குறைந்த விலை கொண்டது என்று ஐஐடி காரக்பூரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

"சமூக விலகல் விதிமுறைகளை மீறும் போதெல்லாம், இந்த சாதனம் எச்சரிக்கை ஒலியை ஒலிக்கச் செய்யும். சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின்படி ஏற்கனவே இந்த சாதனத்தில் தூரம் கணக்கிட்டு வைக்கப்பட்டுள்ளது," என்றார் ஆராய்ச்சி குழுவின் ஒரு உறுப்பினர்.
பொதுக் கூட்டங்கள், சந்தைகள், மால்கள் போன்ற இடங்களில், மக்கள் பெருமளவுக்கு கூடுகிறார்கள். அப்போது இந்த கருவியை ஒரு இடத்தில் பொருத்தி வைத்துவிட்டால் போதும், மக்கள் நெருங்கும்போது சைரன் ஒலியை எழுப்பும். டிஸ்டன்ஸ் ப்ளீஸ் என அது கூறுகிறது.
நெருப்பு பரவும்போது, எப்படி அலுவலகங்களில் உள்ள சைரன் எழுமோ அதுபோலத்தான் இதுவும். இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலமாக, சமூக இடைவெளியை மக்கள் பராமரிக்கிறார்களா இல்லையா என்பது கணக்கிடப்படுகிறது.
இதுபோன்ற சாதனத்தை இன்னும் தொலைதூர இடங்களில் நிறுவி, பயன்படுத்துவதற்கும், மலிவான விலையில், ஹார்ட்வேர் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் செலவைக் குறைப்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக பேராசிரியர்கள் கூறினர். லாக்டவுன் நடைமுறையில் இருக்கும் போது மாணவர்கள் தங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஹார்ட்வேர்களை கொண்டு இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
Recommended Video
அண்மையில் ஐ.ஐ.டி கரக்பூரின் இயக்குநர் பேராசிரியர் வி.கே.தீவரி முன்னிலையில் இந்த கருவி டெமோ செய்து பார்க்கப்பட்டது.
ஆராய்ச்சியாளர்களைப் பாராட்டிய அவர், "சமூகத்தில் கடைசி நபரின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவது நமது பொறுப்பு" என்றார் பெருமிதத்தோடு.












Click it and Unblock the Notifications