இந்தியாவுக்கு “ரிஸ்க்” - விரைவில் துருக்கிபோல் பெரும் நிலநடுக்கம்! பகீர் கிளப்பும் ஐஐடி பேராசிரியர்
துருக்கிபோல் இந்தியாவில் விரைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று ஐஐடி மூத்த பேராசிரியர் ஜாவித் மாலிக் எச்சரித்து உள்ளார்.
டெல்லி: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பே துல்லியமாக கணித்த புவியியல் ஆய்வாளர் பிரான்க் ஹூகர்பீட்ஸ், இந்தியாவிலிருந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐஐடி மூத்த பேராசிரியர் ஜாவித் மாலிக் அதுகுறித்து விளக்கம் கொடுத்து உள்ளார்.
ஐஐடியின் புவி அறிவியல் துறையின் மூத்த பேராசிரியரான ஜாவித் மாலிக், இந்தியாவில் நிலநடுக்கத்திற்கான அபாயம் இருக்கிறதா என்பது குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்து இருக்கிறார்.
இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் துருக்கி சிரியா நிலநடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பே துல்லியமாக கணித்த நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் பிரான்க் ஹூகர்பீட்ஸ் ஆப்கானிஸ்தானில் தொடங்கி, பாகிஸ்தான், இந்தியா வழியாக இந்திய பெருங்கடலில் வரை நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரித்தார்.

இந்தியர்கள் அச்சம்
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக அது இருக்கும் என்று அவர் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது உண்மையாக இருக்கக்கூடும் என்றும், தற்போதே மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஐஐடி பேராசிரியர் ஜாவித் மாலிக்
மறுபக்கம் இவ்வளவு தூரத்துக்கு நிலநடுக்கம் ஏற்பட சாத்தியம் குறைவு என ஒரு தரப்பினர் வாதிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கான்பூர் ஐஐடியின் புவி அறிவியல் துறை மூத்த பேராசிரியர் ஜாவித் மாலிக்கும் இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளார். இந்தியாவில் இதற்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்கான காரணங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வந்தவர் ஜாவித் மாலிக்.

இந்தியாவில் நிலநடுக்கம்
இந்தியாவின் சில பகுதிகளில் விரைவில் ஏற்படப்போகும் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகக் கூடும் என்று அவர் எச்சரித்து இருக்கிறார். "இமயமலை பகுதியையோ அல்லது அந்தமான் நிகோபர் தீவுகளையோ மையப்படுத்தி இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும். எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து மட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

5 மண்டலங்கள்
இந்தியாவில் நிலநடுக்க அச்சுறுத்தல் உள்ள 5 மண்டலங்கள் உள்னன. 5வது மண்டலத்தில் கட்ச், அந்தமான் நிகோபர் தீவுகள், இமய மலை பகுதியும், 4 வது மண்டலத்தில் பஹ்ரைச், லக்கிம்பூர், பிலிபிக், காஜியாபாத், ரூர்கே, நைனிடாலும், 3 வது மண்டலத்தில் கான்பூர், லக்னோ, பிரயாக்ராஜ், வாரணாசி, சோன்பத்ராவும் உள்ளன. இதில் 5வது மண்டலம் ஆபத்தானது" என்றார்.

ஏன் நிலநடுக்கம் வருகிறது?
அந்தமான், உத்தராகண்ட், கட்ச் பகுதிகளில் இதற்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்தும், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஐ.ஐ.டி. பேராசிரியர் ஜாவித் மாலிக், பூமிக்கு அடியில் இருக்கும் டெக்டோனிக் என்ற தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதே நிலநடுக்கத்திற்கு காரணம் என்று தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications