தீவிர புயலாக இருந்த யாஸ் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது- இந்திய வானிலை மையம்
டெல்லி: தீவிர புயலாக இருந்த யாஸ் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்துவிட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் கடந்த 24 ஆம் தேதி யாஸ் புயல் உருவானது. இந்த புயல் ஒடிஸா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை இந்த புயல் அதி தீவிர புயலாக மாறியது. பின்னர் நேற்று காலை பாலசோர் அருகே கரையை கடக்க தொடங்கியது. இந்த புயல் முழுவதுமாக கரையை கடக்க மதியம் ஆகிவிட்டது.
புயல் கரையை கடந்த போது மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்தது. புயலின் வேகம் மணிக்கு 140 கி.மீ முதல் 155 கி.மீ. வரை இருந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கின. மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இந்த நேற்று மாலைக்கு மேல் தீவிர புயலாக வலுவிழந்தது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில், தீவிர புயலாக இருந்த யாஸ், தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்துள்ளது. அது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தமாக மாறக்கூடும் என தெரிவித்துள்ளது.
இந்த புயலால் 5 பேர் இறந்தனர். மேற்கு வங்கத்தில் 1,100 கிராமங்களை சுற்றி வெள்ளநீர் உள்ளது. ஒடிஸாவில் 120 கிராமங்கள் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டன. எனினும் அங்கிருந்த மக்கள் ஏற்கெனவே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications