டெல்லிக்கு நிச்சயம் தனிமாநில அந்தஸ்து.. தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மி வாக்குறுதி
டெல்லி: நடைபெற உள்ள டெல்லி மக்களவை தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை மூன்று கட்ட மக்களவை தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலம் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் ஆம் ஆத்மி இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், டெல்லி மக்களவை தொகுதிகளில் தாங்கள் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்று தரப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில் அதற்கான விரிவான வழிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படும் என்று விளக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும், விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது
மேலும் கல்வி, சுகாதாரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உறுதி கூறப்பட்டுள்ளது.