அக்னிபாத்: டெல்லி ஜந்தர் மந்தரில் குதித்த காங்கிரஸ்! பதாகைகளுடன் களமிறங்கிய பிரியங்கா காந்தி
டெல்லி: அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் பிரியங்கா காந்தி பதாகைகளுடன் இன்று களமிறங்கி தர்ணாவில் ஈடுபட்டார்.
இந்தியாவின் முப்படைகளில் ஆள்சேர்ப்புக்காக அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
பீகார், உத்தர பிரதேசம், தெலங்கானா செகந்திரபாத் உள்பட பல இடங்களில் போராட்டம் வன்முறையானது. ரயில்களுக்கு தீவைக்கப்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் கோரிக்கை
இந்த போராட்டத்தின்போது இளைஞர்கள் கூறுகையில், ‛‛அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மீண்டும் பழைய முறையையே முப்படைகளிலும் ஆள்சேர்ப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டும்'' என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த போராட்டத்தின் காரணமாக மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்தது. வயது தளர்வு, மத்திய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய துணை ராணுவ படை, அசாம் ரைபிள் பிரிவு ஆகியவற்றில் 10 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறமாட்டோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திரும்ப பெற காங்கிரஸ் வலியுறுத்தல்
இந்நிலையில் தான் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. மேலும் தொடர் போராட்டங்கள் மூலம் மத்திய அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தாலும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாகவும், திட்டத்துக்கு எதிராகவும் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

தலைவர்கள் தொடர் விமர்சனம்
இதேபோல் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எம்பி, எம்எல்ஏக்கள் என அனைவரும் அக்னிபாத் திட்டத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் மத்திய அரசு இந்த திட்டம் பற்றி மீண்டும் மறுஆய்வு செய்து அனைவருடனும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

களமிறங்கிய பிரியங்கா காந்தி
இதன் தொடர்ச்சியாக இன்று டெல்லியில் காங்கிரஸ் சார்பில் தர்ணா போராட்டம் துவங்கியது. அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனக்கூறி நடந்த தர்ணாவில் பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் உள்பட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இவர்கள் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டனர். இதையொட்டி ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications