அன்றே சொன்ன ராகுல் காந்தி.. தேர்தல் பத்திரம் பற்றி 2019-ல் போட்ட ட்வீட்.. என்ன சொன்னார் பாருங்க
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பினை அளித்துள்ள நிலையில், தேர்தல் பத்திரங்கள் குறித்து ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு பதிவிட்ட ட்விட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேர்தல் பத்திரம் திட்டம் பற்றிய அறிவிப்பினை மத்திய அரசு கடந்த 2017 - 2018 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான பட்ஜெட்டின் போது வெளியிட்டது. தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டம் அமலுக்கு வந்தது. தேர்தல் பத்திரம் திட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, தேர்தல் பத்திரங்களை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும்.

ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். இதுவே தேர்தல் காலத்தில் மட்டும் மாதம் முழுவதும் விற்பனை செய்யப்படும். தனிநபர்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் என யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு இந்த தேர்தல் பத்திரங்கள் வழியாக நன்கொடை அளிக்கலாம்.
தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்களின் விவரம் எதுவும் இருக்காது. எனவே, இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் பத்திர திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. இதில், தேர்தல் பத்திரம் என்பது சட்ட விரோதமானது என்றும் அவற்றை ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜகவே இந்த பத்திரங்கள் வழியாக அதிக நன்கொடை பெற்ற கட்சியாக உள்ளது. அதாவது, தேர்தல் பத்திர திட்டம் அமல்படுத்தப்பட்ட 6 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக பாஜக பெற்றுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மத்தியில் ஆளும் பாஜக அரசு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளன.
இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று, தேர்தல் பத்திரம் குறித்து ராகுல் காந்தி பதிவிட்ட ட்வீட்டை தற்போது காங்கிரஸ் கட்சியினர் அன்றே சொன்னார் ராகுல் காந்தி என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த ட்வீட்டீல் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- புதிய இந்தியாவில் லஞ்சம் மற்றும் சட்டவிரோத கமிஷன்களே தேர்தல் பத்திரம் என்பதாகும் என்று பதிவிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications