ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சகம் பற்றி விவாதிக்கனும்! விடாப்பிடியாய் நிற்கும் இந்தியா கூட்டணி! பின்னணி
டெல்லி: ரஜ்யசபாவில் உள்துறை அமைச்சகம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் 15 கட்சிகளும் நவீன் பட்னாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியும் ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கரிடம் கோரிக்கை வைத்துள்ளன. இந்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வைப்பதற்கான காரணம் குறித்த சில தகவலும் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கியது. மோடி 3.0 அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிர்மலா சீதாரமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தற்போது பட்ஜெட் உரை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் வாதங்கள், எதிர்க்கட்சிகள் அமளி என பரபரப்புக்கு பஞ்சம் இன்றி கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

பட்ஜெட் விவாதத்திற்கு இடையே பிற தனி அமைச்சகங்கள் குறித்த விவாதத்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக முடிவு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில்தான், இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சி எம்.பிக்கள் இன்று ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கரிடம் கூட்டாக ஒரு கோரிக்கை முன்வைத்தனர். அதில், ராஜ்யசபாவில் விவாதிக்கப்பட வேண்டிய நான்கு அமைச்சகங்களில் ஒன்றாக உள்துறை அமைச்சகத்தையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நான்கு அமைச்சகங்களுக்கான ஒதுக்கீடு மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க தேர்வு செய்யும். ராஜ்யசபாவின் பிசினஸ் அட்வைசரிஸ் கமிட்டியில் இதுவரை 3 அமைச்சகங்களை மட்டுமே தேர்வு செய்துள்ளது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆகிய மூன்று அமைச்சகங்கள் மட்டுமே தேர்வு செய்துள்ளது.
நான்காவது அமைச்கம் எது என்பதை இன்னும் முடிவு செய்யாமல் நிலுவையில் ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் வைத்துள்ளார். இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரைன், ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சகம் குறித்து கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த ஜெகதீப் தன்கர் இது பற்றி நாம் பிறகு விவாதித்து முடிவு செய்வோம்" என்று பதிலளித்தார்.
இதையடுத்து இன்று பிற்பகல் மீண்டும் ஓ பிரைன் இந்த விவகாரத்தை அவையில் எழுப்பினார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில், அரசு ஓடி ஒளிந்து கொள்ளக் கூடாது" என்றார். முன்னதாக இதே கோரிக்கை தொடர்பாக ஓ பிரைன் ராஜ்யசபா தலைவர் தன்கரிடம் கோரிக்கை கடிதம் வைத்தார். இந்த கடிதத்தில், இந்தியா கூட்டணியை சேர்ந்த 15 கட்சிகள் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை கையெழுத்திட்டு இருந்தன.
திமுக, சிபிஎம், பிஜேடி ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் உள்துறை அமைச்சகம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இருந்தன. தொடர்ந்து பேசிய டெரிக் ஓ பிரைன், நாடாளுமன்றத்தில் உள்ள பல கட்சிகள் வேவ்வேறு மாநிலங்களில் வலுவான கட்சியாக உள்ளன. கூட்டாட்சி தத்துவத்தில் உள்துறை அமைச்சகம் என்பது மிக முக்கியமான துறை. எனவே உள்துறை அமைச்சகம் குறித்து விவாதிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்றார்.
மணிப்பூர் வன்முறை, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல், மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதம் ஆவது, கூட்டாட்சி அமைப்பு, மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக எழும் குற்றச்சாட்டு ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புவதாக ராஜ்யசபா வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே தான், உள்துறை அமைச்சகம் குறித்தும் விவாதம் வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்து இருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications