வருமான வரி கணக்கு தாக்கல் பண்ணலயா.. கவலையை விடுங்க.. அவகாசம் நீட்டிப்பு! இன்றே கடைசி நாள்
டெல்லி: வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று (15.09.2025) ஐடிஆர் பைல் செய்யும் இணையதளம் முடங்கியது. கடைசி நாள் என்பதால் பலரும் இணையதளத்தை அணுகியதால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் இணையதளம் முடங்கியதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது ஒரு நாள் கூடுதலாக அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வருமான வரி கணக்கை இன்றும் தாக்கல் செய்ய முடியும்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15, 2025 (நேற்று) முடிவடைவதாக இருந்தது. காலக்கெடு முடிந்த பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதால், மாத சம்பளதாரர்கள், இதர வருவாய் பிரிவினர் உள்ளிட்டவர்கள் கடந்த சில தினங்களாக வருமான வரி கணக்குகளை அவசர அவசரமாக தாக்கல் செய்தனர்.

வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்
மத்திய அரசு அறிவித்த வருமான வரி உச்சவரம்பைத் தாண்டி வருமானம் இருந்தால், நிச்சயம் வருமான வரி செலுத்தி ITR தாக்கல் செய்ய வேண்டும். இதனால் கடந்த சில நாட்களாகவே வருமான வரி கணக்கு ரிட்டர்ன் செய்வோர் இணையதளத்தில் சில சிக்கல்கள் எதிர்கொண்டனர்.
இணையதளம் திடீரென முடங்கியது
அவ்வப்போது வருமான வரி இணையதளம் சரியாக லோடு ஆகாமல், மெதுவாக இயங்கியது. இதனால் வருமான வரி தாக்கல் செய்வோர் கடும் சிரமத்தைச் சந்தித்தனர். இந்த நிலையில், நேற்று இணையதளம் திடீரென முடங்கியது. இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் தவித்துப் போயினர்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. X உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஒரு நாள் கால அவகாசம்
இந்த நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் கோரிக்கையை ஏற்று, ஒரு நாள் கால அவகாசம் வழங்கியுள்ளது வருமான வரித்துறை. இதன்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று (16.09.2025) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை அலுவலகத்தின் X வலைத்தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
"வருமான வரி ரிட்டர்ன் கணக்கு (ITRs) தாக்கலுக்கான கால அவகாசம் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், இந்த தேதி செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 16 செப்டம்பர் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது."
இன்றே கடைசி நாள்
வருமான வரி கணக்கு தாக்கல் இந்த ஆண்டு சாதனை எண்ணிக்கையில் அதிகரித்து இருப்பதாகவும், வருமான வரித்துறை தனது X பதிவில் கூறியுள்ளது. கடந்த ஆண்டு 7.28 கோடி பேர் ITR தாக்கல் செய்த நிலையில், இந்த ஆண்டு 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் கணக்கு தாக்கல் செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு நாள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications