அதிகரிக்கும் கொரோனா..பரிசோதனையை அதிகரியுங்கள்..மாநில அரசுகளுக்கு சுகாதாரத்துறை அறிக்கை
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 146 நாட்கள் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு 1590 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 8601 ஆக உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 22 ஆம் தேதி பிரதமர் மோடி அதிகரிகளுடன் உயர் மட்ட ஆலோசனை மேற்கொண்டார்.

மோடி ஆலோசனை
கொரோனா பாதிப்பு நிலவரம், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிதல், கண்காணித்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் உள்பட 5 வகையான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ்களின் மரபணு சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை விடுத்து இருந்தார்.

சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. மற்றொரு புறம் தமிழகத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பரவத் தொடங்கியது. இதையடுத்து காய்ச்சல் பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய சுகாதாரத் துறைக்கு தமிழகம், குஜராத், கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 549 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் 56 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாகவும், உயிரிழப்பு எதுவும் இல்லை என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவித்திருந்தது. தொடர் காய்ச்சல் இருந்து வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மக்களிடம் விழிப்புணர்வு
நாடெங்கும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் நிலையில், கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்
இந்த நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை, ஒப்பிட்டு அளவில் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார்.

சுவாசப்பிரச்சினை
தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு சுவாசப்பிரச்சனை பாதிப்பு அதிகம் உள்ளது. அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications