நாளை நாம் கொண்டாடுவது 77வது சுதந்திர தினமா? இல்லை 78வது சுதந்திர தினமா? இதை கணக்கிடுவது எப்படி
டெல்லி: நாளைய தினம் நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும் இதற்காக தங்கள் இன்னுயிரை நீர்த்தவர்களையும் நாம் இந்த நாளில் நினைவு கூறுகிறோம். அதேநேரம் இந்த சுதந்திர தின கொண்டாட்டம் குறித்து நமக்கு சில கேள்விகள் வரலாம். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து நமக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்து அனைவருக்கும் தெரியும். இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம்.

இந்நாளில் நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்கிறோம். நமது மூவர்ணக் கொடியை ஏற்றி தேசிய கீதம் பாடி சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
சுதந்திர தினம்: அதன்படி இந்தாண்டு நாளை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதேநேரம் இந்த சுதந்திர தினம் குறித்து நமக்கு பல்வேறு கேள்விகள் எழும். குறிப்பாக இது 77வது சுதந்திர தினமா அல்லது 78வது சுதந்திர தினமா.. எத்தனையாவது சுதந்திர தினம் என்பது எப்படிக் கணக்கிடப்படுகிறது எனப் பல கேள்விகள் வரும். இதற்கான பதில்களை நாம் பார்க்கலாம்.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளான 1947 ஆகஸ்ட் 15ஐ முதலாம் சுதந்திர தினமாகக் கருத வேண்டுமா அல்லது அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1948 ஆகஸ்ட் 15ஐ தான் முதலாம் சுதந்திர தினமாகக் கருத வேண்டுமா என்பதே பலருக்கும் இருக்கும் கேள்வி. இதன் காரணமாகவே 77ஆவது சுதந்திர தினமா அல்லது 78வது சுதந்திர தினமா என்பதில் கேள்வி எழும்.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து கணக்கிட்டுப் பார்த்தால் இது நாம் சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகிவிட்டதைக் குறிக்கும். அதேநேரம் 1948ல் இருந்து கணக்கிட்டால் அது 77வது சுதந்திர தினம்.
மத்திய அரசு சொல்வது என்ன: மத்திய அரசு சுதந்திர தின கொண்டாட்டம் தொடர்பாகக் கடந்த 2022ல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 76வது சுதந்திர தினம் என்றே குறிப்பிட்டு இருந்தது. அதன்படி பார்க்கும் போது நம் நாளைய தினம் இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்தாண்டு அரசு தரப்பில் வெளியாகும் அனைத்து செய்திக்குறிப்புகளிலும் கூட 78ஆவது சுதந்திர தினம் என்றே கூறப்பட்டுள்ளது.
மூவர்ண கொடி: சுதந்திர தினத்தன்று நாம் மூவர்ணக் கொடியை ஏற்றுவோம். இந்த மூவர்ணக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜூலை 22, 1947ம் தேதி நடைபெற்ற அரசியலமைப்புச் சபையின் கூட்டத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூவர்ணக் கொடியில் மேலே இருக்கும் காவி நிறம் நாட்டின் வலிமை மற்றும் தைரியத்தைக் குறிக்கிறது. நடுவில் உள்ள வெள்ளை நிறம் மற்றும் அசோக சக்கரம் இருக்கும். அது அமைதியையும் உண்மையையும் குறிக்கிறது. கீழே இருக்கும் பச்சை நிறம் வளம், வளர்ச்சியைக் குறிக்கிறது.
மற்ற நாடுகள்: மேலும், இந்தியாவைப் போலவே வட கொரியா, தென் கொரியா, பஹ்ரைன், காங்கோ குடியரசு, லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளும் ஆகஸ்ட் 15ம் தேதியைச் சுதந்திர தினமாகக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications