ஆயிரம் பிரச்சினை இருந்தாலும்.. நெருக்கடியில் மாலத்தீவுக்கு உடனே கைகொடுத்த இந்தியா.. மேட்டர் இதுதான்
டெல்லி: சீனாவுடன் நெருக்கம் காட்டி இந்தியாவுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறது மாலத்தீவு. சமீப காலமாக இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட போதிலும் தற்போது இந்தியா, மாலத்தீவுக்கு சாதகமான விஷயம் ஒன்றை செய்துள்ளது.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய குட்டி நாடு மாலத்தீவு. இந்தியாவுக்கு நெருக்கமான நாடாக இருந்து வந்த மாலத்தீவில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மாலத்தீவின் புதிய அதிபராக முகம்மது முய்சு பதவியேற்றார்.

சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முய்சு பதவியேற்ற பிறகு, சீனாவுடன் மிக நெருக்கம் காட்ட தொடங்கியது மாலத்தீவு. இந்த சூழலில், லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர்கள் பதிவிட்டனர்.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது. போதாக்குறைக்கு மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் முய்சு உத்தரவிட்டார். மாலத்தீவு இப்படி இந்தியாவுக்கு எதிராக முஷ்டியை முறுக்கினாலும் இந்தியாவையே பெரிதும் அந்த நாடு நம்பியிருக்கிறது.
மாலத்தீவு என்னதான் இந்தியாவுடன் மோதல் போக்கை கையாண்டு வந்தாலும் இந்தியா, நெருக்கடியான தருணங்களில் அந்த நாட்டை கைவிடுவது இல்லை. அதை நிரூபிக்கும் விதமாகத்தான் தற்போது, இந்தியாவின் செயல் ஒன்று அமைந்துள்ளது. மாலத்தீவு நாட்டிற்கு சர்க்கரை, கோதுமை, அரிசி , வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கட்டுப்பாடுகளுடன் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.
இது போக 1 மில்லியன் டன் ஆற்று மணல் மற்றும் கற்கள் ஏற்றுமதிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவுடன் மோதல் போக்கை கையாண்டு வந்த மாலத்தீவு, திடீரென கடன் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கடந்த சிலவாரங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்து இருந்தது. இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு கூறுகையில், மாலத்தீவில் பெரிய எண்ணிக்கையிலான திட்டங்களை இந்தியா செயல்படுத்தியது.
எங்களின் நெருங்கிய நட்பு நாடாகவும் இந்தியா உள்ளது. தொடர்ந்து அப்படியே இருக்கும். இந்தியாவிடம் மாலத்தீவு வாங்கிய வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை திருத்தி அமைக்க வேண்டும். இத்தகைய கடன் நிவாரணத்தை இந்தியா அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கடன் திருப்பி செலுத்தும் விவகாரத்தில் நான் இந்தியாவுடன் பேசிக்கொண்டு வருகிறேன்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications