உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடி தடை- சில ரக அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு!
டெல்லி: இந்தியாவில் இருந்து உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடை இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. அதேபோல சில ரக அரிசி ஏற்றுமதிக்கும் மத்திய அரசு 20% வரி விதித்துள்ளது.
உலக அளவில் சீனாவுக்கு அடுத்ததாக அரிசி ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40%. 2021-22ம் ஆண்டில் இந்தியா 21.1 டன் அரிசியை ஏற்றுமதி செய்திருந்தது.
ஆனால் இந்தியாவில் நடப்பாண்டில் நெல் சாகுபடி பரப்பளவு 6% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 367.55 லட்சம் ஹெக்டேர் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் 2022-23- ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி கணிசமாக பாதிக்கும் எனவும் கூறப்பட்டது.

இதனால் மத்திய அரசு நெல், அரிசி ஏற்றுமதிக்கு நடப்பாண்டு தடை விதிக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் நெல்-அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்பட்டது.
அதே நேரத்தில் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை மட்டும் விதிக்கும் எனவும் சில தகவல்கள் தெரிவித்தன. இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தியது.

இதனிடையே சந்தைகளில் அரிசி விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக கடுமையாக உயர்ந்தது. தமிழ்நாட்டில் சென்னையில் 26 கிலோ எடையுடான 1 மூட்டை பொன்னி அரிசி நேற்றைய நிலவரப்படி ரூ1200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் முந்தைய விலை ரூ900. பொன்னி அரிசி விலை 1 மூட்டைக்கு ரூ300 உயர்ந்தது. பொன்னி பச்சை அரிசி விலையானது ரூ1250க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் முந்தைய விலை ரூ1050. அதாவது பொன்னி பச்சை அரிசி விலை ரூ200 என்ற அளவுக்கு உயர்ந்தது. பாசுமதி அரிசியின் விலை ரூ300 அளவுக்கு உயர்ந்தது. 1 மூட்டை பாசுமதி அரிசி விலை ரூ2200-ல் இருந்து ரூ2500க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நெல் மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20% வரி விதித்தது. இந்த வரி விதிப்பு சில குறிப்பிட்ட ரக அரிசிகளுக்கு மட்டும் எனவும் மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உடைந்த அரிசி ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவே இந்த 20% வரி விதிக்கப்பட்டதா? அல்லது அரிசி கையிருப்பில் ஏதேனும் பிரச்சனையா? என்கிற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications